ரஜினி மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணகிரி மா.செ.. அதிரடியாக திமுகவில் இணைந்தார்
ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மாவட்ட மக்கள் மன்றத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோரும் இணைந்தனர். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர் உட்பட அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மதியழகனை அதிரடியாக நீக்கி உள்ளார்.
கட்சி ஆரம்பிக்கும் முன்னே ரசிகர் மன்றத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உளவு, சதி, துரோகம் வலம் வந்தது. பொழுது விடிந்து பொழுது போனால் ஏதாவது ஒரு பிரச்சனையை ரஜினி சந்தித்து வந்தார்.
பிறகு ஒருநாள் அரசியலுக்கு வரப்போகிறேன், 234 தொகுதிகளிலும் போட்டி என்றார். சொன்னதும் ரசிகர் மன்றங்களை கலைத்து மக்கள் மன்றங்களாக மாற்றினார்.
பிரச்சனைகள்
சரி ஏதோ உறுப்பினர் சேர்க்கையிலிருந்து கட்சி தொடங்குவதற்கான அடித்தளங்கள் என்றும், அதன் மூலம் அரசியல் வருகை பலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மக்கள் மன்றத்திலேயும் பிரச்சனைதான் தாண்டவமாட துவங்கியது.
மா.செ. நீக்கம்
இப்போதுகூட கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏன் இந்த அதிரடி? எதற்காக முக்கிய மாவட்டத்தில், முக்கிய பொறுப்பிலிருப்பவர் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து விசாரித்தோம்.
திமுகவிற்கு தாவலா?
கட்சி ஆரம்பித்து இந்த ஒரு வருஷம் ஆகியும் இதுவரை கட்சி பெயர், சின்னம் ஒன்றையுமே ரஜினி அறிவிக்கவில்லை. எத்தனை நாள்தான் காத்து கிடப்பது? என்று விரக்திக்கே சென்றுவிட்டார்கள். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அந்த கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதாம். இந்த விஷயம் ரஜினிக்கு எட்டியதை அடுத்தே இந்த நீக்கம் என்று சொல்லப்படுகிறது.
பாதுகாக்க வேண்டும்
விரைவில் தேர்தலும் வர உள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகளே விரக்தியில் வேறு கட்சிகளுக்கு தாவி கொண்டிருந்தால் மக்கள் மன்றம் மேலும் வலுவை இழக்க நேரிடும். ஏதோ ரஜினியின் பெயர் இன்னும் நீடிக்க இந்த மக்கள் மன்றங்கள் உதவியாக இருந்து வரும் நிலையில், அதிலுள்ளவர்களையும் பொத்தி பாதுகாக்க நடவடிக்கைகளை ரஜினி உடனடியாக மேற்கொள்வது அவசியம்.
வீழ்ச்சி
நாளைக்கு, ஒருவரை பார்த்து இன்னொருவர் மாற்று கட்சிக்கு செல்ல ஆரம்பித்தால், அல்லது அதற்கான முயற்சி எடுக்கிறார் என்று கேள்விப்பட்டாலே நீக்கம் என்று அதிரடிகளில் இறங்கி கொண்டிருந்தால் அதன் வீழ்ச்சி ரஜினிக்குதான் என்பதையும் உணர வேண்டும்.
காணாமல் போய்விடும்
இதுவரை போனது போகட்டும் என்றாலும், இனிமேலாவது கட்சி, அரசியல் வருகையினை ரஜினி அறிவிப்பது அவசியம். இல்லை என்றால், ஒருகாலத்தில் எப்படியும் முதல்வராக வேண்டும் என ரஜினியும், முதல்வராக்கியே தீருவோம் என ரசிகர்களும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது எல்லாம் காணாமலேயே கரைந்து போய்விடும்.
திமுகவில் இணைந்தனர்
இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து, திமுகழகம் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மேலும் 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23ம் தேதி கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைய உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.