தலைவர் இல்லாத களமா?.. வேண்டாம்! எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே.. வேதனையுடன் ரஜினி ரசிகர்கள்
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததால் யாரையும் தலைவராக ஏற்க மாட்டோம் என கூறி நோட்டாவுக்கு தங்கள் ஓட்டுகளை போடவுள்ளதாக விரக்தியுடன் கூறுகிறார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா, அஜித் என ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் ரஜினிக்கென இருப்பது ஸ்டைல். அவரது ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் அவருக்கு கூடினார்கள்.
இதையடுத்து இமயத்தையே தொட்டாலும் இன்றும் சாதாரணமாக இருப்பதால் ரஜினி தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். அவர் அரசியலுக்கு வராமலேயே செய்த நலத்திட்டங்களை பார்த்து அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆசைப்பட தொடங்கினார்.
ரஜினி பொது சொத்தல்ல.. அவருக்கென குடும்பம் இருக்கு.. உடம்பும் இரும்பல்ல.. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க!
ரஜினி
மேலும் 1996-ஆம் ஆண்டு ஒன் வுமன் ஆர்மியான ஜெயலலிதாவையே எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் ரஜினி. அப்போது அவரது வாய்ஸுக்கு தமிழக மக்கள் மதிப்பு கொடுத்து ஜெயலலிதாவுக்கு ரஜினியின் செல்வாக்கை அறிய வைத்தனர். இதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் நரசிம்மராவ் அழைத்ததாகவும் கூறுகிறார்கள்.
ரஜினி கும்பிடு
அப்போதிலிருந்து ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வர அழைத்து வருகிறார்கள். படையப்பா படத்தில் கூட கிக்கு ஏறுதே பாடலுக்கு பின்னர் ரஜினி வீட்டிற்கு கெஸ்டாக வரும் ஒரு அரசியல்வாதி, எப்போது வர்றீங்க என கேட்பார் அதற்கு ரஜினி கும்பிடு போட்டு என்னை விட்டுருங்க என்பார்.
ரசிகர்கள்
இவ்வாறு சளைக்காமல் ரஜினி இன்று வருவார், நாளை வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு 2017-ஆம் ஆண்டு அவர் வருகிறார் என அறிவித்தவுடன் குஷியாகிவிட்டனர். அது போல் 3 ஆண்டுகள் மீண்டும் காத்திருந்த ரசிகர்கள், அவர் வருவாரா என பாடி கொண்டிருந்தனர்.
நிரந்தரம் இல்லை
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவர் அரசியல் கட்சியை தொடங்குவதாக கடந்த 3-ஆம்தேதி அறிவித்தவுடன் போட்றா வெடியை என பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நிரந்தரம் இல்லை என்பதை காலம் நேற்று அவர்களுக்கு உணர்த்திவிட்டது.
ரஜினி திடீர் முழுக்கு
ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் மனமுடைந்தனர். சிலர் அவர் சொல்லும் நியாயமான காரணத்தை ஏற்றுக் கொண்டனர். பலர் அதை ஜீரணிக்க முடியாமல் தவித்தனர். இதனால் ரஜினியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க முடியாது. ரஜினியில்லாத தேர்தலை சந்திக்க முடியாது.
நோட்டாவுக்கே
ஆனால் ஓட்டுரிமை என்பது ஜனநாயகம். ஓட்டு போடாமல் தவிர்ப்பதை ரஜினியே விரும்ப மாட்டார். எனவே எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே என ரசிகர்கள் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள். ஒரு சில தேர்தல்களில் தேசிய கட்சி பெற்ற வாக்குகளை காட்டிலும் நோட்டா அதிகமாகவே பெற்றது. அது இந்த முறையும் நோட்டாவுக்கான ஓட்டு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.