1 மணி நேர இடைவெளியில் ரஜினியின் வித்தியாசமான 2 பேட்டி.. இடையில் என்ன நடந்தது? இதுதான் காரணமோ!
சரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: சரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார். அவரின் இந்த இரண்டு பேட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.
அது லோக்சபா தேர்தல் வந்த சமயம் ரஜினியிடம் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ரஜினி யார் பலசாலி? 10 பேர் சேர்ந்து கூட்டணி இருக்கிறார்களே? அப்படியென்றால் யார் பலசாலியாக இருப்பார்? என்று கேட்டார்.
அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றவர்களை, யார் அந்த 7 பேர் என்றும் கேட்டார். அவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி சர்ச்சையானது. அட பாஜகவிற்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்று எல்லோரும் பேசினார்கள்.

மறுநாள் பேட்டி
இந்த சர்ச்சையை தொடர்ந்து மறுநாளே ரஜினிகாந்த் இன்னொரு பேட்டி அளித்தார். அதில், அந்த 7 பேர் யார் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மோடிதான் பலசாலி. அவரைதான் எல்லோரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள், அதனால் அவர்தான் பலசாலி என்று பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி பேசினார்.

நிலைப்பாடு
இப்படி முதலில் பாஜகவிற்கு எதிராக பேசுவது போல பேசிவிட்டு, மறுநாளே பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது எல்லாம் ரஜினிகாந்த் வழக்கமாக செய்வதுதான். தற்போது அதேபோல்தான் அவர் பேட்டி அளித்து இருக்கிறார். இன்று காலை 11 மணி அளவில் பேட்டி அளித்த ரஜினிகாந்த் பாஜகவிற்கு எதிராக பேசினார்.

எதிர்ப்பு
அவர் தனது பேட்டியில், திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது, என்று குறிப்பிட்டார்.

பாஜக கோபம்
அவரின் இந்த பேட்டி பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அட எப்போதும் பாஜகவிற்கு ஆதரவாக பேசும் ரஜினி இப்போது ஏன் பாஜகவிற்கு எதிராக பேசுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். முரளிதரராவ் தொடங்கி வானதி சீனிவாசன் வரை எல்லோரும் ரஜினியின் பேட்டியால் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் பேட்டி
இதனால் ஒரு மணி நேர இடைவெளியில் ரஜினிகாந்த் மீண்டும் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கொஞ்சம் பாஜகவின் கருத்துக்களுக்கு ஆதரவாக பேசினார். ஆம், அவர் தனது பேட்டியில், திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர், அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. திருவள்ளுவருக்கு காவி நிறம் உடை அணிவித்தது பாஜகவின் தனிப்பட்ட விவகாரம். இதை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பது வேடிக்கையாக உள்ளது.

பெரிதானது எப்படி
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்று இரண்டாவது முறை பேட்டியில் குறிப்பிட்டார். ஆம், முதல் பேட்டியில் பாஜகவை எதிர்த்துவிட்டு, இரண்டாவது பேட்டியில் பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல ரஜினிகாந்த் பேசினார். பெரிதாக பாஜகவை அவர் இரண்டாவது முறை சீண்டவில்லை. முதல் பேட்டியை சமாளிக்கும் விதமாக இரண்டாவது பேட்டி இருந்தது.

1 மணி நேரம்
இந்த இரண்டு பேட்டிகளுக்கும் இடையில் 1 மணி நேரம்தான் இடைவெளி. இந்த இடைவெளியில் என்ன நடந்தது? ரஜினி திடீர் என்று இரண்டாவது பேட்டி கொடுக்க காரணம் என்ன? அவரின் மனமாற்றம் எதனால் ஏற்பட்டது? பாஜகவிற்கு கொஞ்சம் ஆதரவாக பேச என்ன காரணம் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் விடை ரஜினிக்கு மட்டுமே தெரியும்.












Click it and Unblock the Notifications