Rajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: எப்போதோ, 1970களில் நடைபெற்றதாகக் கூறப்படும், பெரியார் தொடர்பான ஒரு சம்பவத்தை இப்போது நினைவு வைத்து பேசக்கூடிய நடிகர் ரஜினிகாந்த், நாடே பற்றி எரியும் பல விஷயங்களில் கருத்து தெரிவிக்காமலோ, அல்லது நேர் எதிரான கருத்தை தெரிவித்தோ, சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்துள்ளதை மறக்க முடியாது.

    ராமர் மற்றும் சீதை உருவப்படங்களை, பெரியார் செருப்பால் அடித்ததாகவும், அந்த சம்பவம் மறைக்கப்பட கூடியது அல்ல.., ஆனால் மறக்கப்பட கூடியது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    அனைத்து முக்கியமான விஷயங்களையும் பற்றி கருத்து சொல்லக் கூடிய ஒருவர் இதை கூறியிருந்தால் கூட பரவாயில்லை. செலக்டிவாக, சில விஷயங்களில் மட்டுமே கருத்து தெரிவிக்கக் கூடிய ரஜினிகாந்த், 'மறக்கக் கூடிய விஷயம்' என்று, தான் சுட்டிக்காட்டும் ஒரு விஷயத்தை, எதற்காக இப்போது பொதுவெளியில் நினைவுபடுத்தினார் என்ற கேள்வி பரவலாக எழத் தொடங்கியுள்ளது.

    ரஜினிகாந்த் தேசிய அளவில் முக்கியமான விஷயங்களில், எப்படி எல்லாம் சமீப காலத்தில் கருத்து தெரிவித்துள்ளார்? என்பது பற்றி, ஒரு சின்ன ரீவைண்ட் சென்று வரலாம் வாங்க.

    புதிய இந்தியா

    ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு தான். அப்போது புழக்கத்தில் இருந்த 500 1,000 போன்ற உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நடவடிக்கைக்கு, வான்டட்டாக வந்து கருத்து தெரிவித்தார் ரஜினிகாந்த். தனது டுவிட்டர் பக்கத்தில், "ஹேட்ஸ் ஆப், நரேந்திர மோடி ஜி, புதிய இந்தியா பிறந்து விட்டது" என்று புளகாங்கிதம், பொங்கப், பொங்க கருத்து கூறினார் ரஜினி.

    நடைமுறை சிக்கல்

    நடைமுறை சிக்கல்

    அதுகூட பரவாயில்லை. பல பிரபலங்களும்கூட, பின்னாட்களில் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் அப்போது பாராட்டினர் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் பணமதிப்பிழப்பு விவகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கு காத்திருந்த பல முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுக்க இவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறை தாண்டியது. இந்த சிக்கல் பற்றி ரஜினிகாந்த் ஒரு வார்த்தையும் கூறவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

    கதை கந்தல்

    கதை கந்தல்

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. ஏற்கனவே, புழக்கத்தில் இருந்த அதே அளவுக்கான பணம் திரும்பவும் புழக்கத்தில் வந்துவிட்டது என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டின. ரிசர்வ் வங்கி அறிக்கையும், பணமதிப்பிழப்பால் பலனில்லை என்பதை தான், விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதுவது போல சுட்டிக்காட்டியது. பிற அத்தனை தலைவர்களும் இது பற்றி விமர்சனம் வைத்த நிலையிலும் "இன்னும் புதிய இந்தியா பிறக்கவில்லை" என்று ஒரு ட்வீட் போட ரஜினிகாந்துக்கு மனசு வரவில்லை.

    ராஜதந்திரமாம்

    ராஜதந்திரமாம்

    அதாவது சில வருடங்கள் பழைய தகவல். சமீபத்தில் நாட்டை உலுக்கிய பல சம்பவங்களுக்கும் ரஜினிகாந்த் மௌனம் காத்தது, மற்றும் அவர் அளித்த பதில்கள் அதிர்ச்சி ரகம். அதில் ஒரு முக்கியமான விஷயம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பானது. ஏற்கனவே வாக்குறுதி அளித்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், திடீரென நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசரத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநில தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை கண்டித்த நிலையிலும், 'மனம் தளரவில்லை' ரஜினிகாந்த். "இந்த விஷயத்தை பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர்" என்று போட்டாரே ஒரு போடு.

    குடியுரிமை சட்டத் திருத்தம்

    குடியுரிமை சட்டத் திருத்தம்

    அடுத்ததாக நாட்டை உலுக்கிய ஒரு பெரிய பிரச்சனை குடியுரிமை சட்டத் திருத்தம். இந்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மாணவர்கள் இடதுசாரிகள், நடுநிலைவாதிகள் என பலரும் வீதிக்கு வந்தாச்சு. ஆனால், மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறப்படும், இப்படி ஒரு சட்டத்தை எதிர்த்து எந்த வார்த்தையும் பேசவில்லை ரஜினிகாந்த். ஆனால் சம்பந்தம் இல்லாமல், "எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை வழி ஆகிவிடக்கூடாது. தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது," என்று தெரிவித்தார். இத்தனைக்கும், அப்போது வன்முறையே நடக்கவில்லை என்பதுதான் இதில் நகைமுரண். போராட்டத்திற்கும், வன்முறைக்கும், வித்தியாசம் தெரியாமல் ஆளும் கட்சிக்கு இப்படியா வக்காலத்து வாங்குவது என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தன.

    துரதிருஷ்டமாம்

    துரதிருஷ்டமாம்

    மற்றொரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பது இந்தி திணிப்பு தொடர்பானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில மாதங்கள் முன்பாக இந்தியை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்ற தொனியில் பேசி இருந்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாது, பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினிகாந்த் தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் கூட இந்தியை ஒரு பொதுவான மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை தான் நமது நாட்டில் நிலவுகிறது.. ஒரு பொதுவான மொழி இருந்தால் அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது என்று கூறினார்." அது துரதிருஷ்டமோ இல்லையோ, கண்டிப்பாக, இப்படி ஒரு வார்த்தையை தமிழக மக்கள் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது துரதிருஷ்டவசமானதுதான்.

    பல வருட பஞ்சாயத்து

    பல வருட பஞ்சாயத்து

    இது தேசிய அளவிலான பிரச்சனைகள் என்றால், தமிழகத்திலும் பல்வேறு பற்றி எரியக் கூடிய விஷயங்களில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. மத்தியிலோ அல்லது மாநிலத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இப்படி பார்த்து, பார்த்து, பக்குவமாக, கருத்து கூறக்கூடிய ரஜினிகாந்த், எதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற.., அதுவும் சர்ச்சையில் இருக்கக்கூடிய ஒரு விவகாரம் தொடர்பாக இப்படி ஒரு கருத்தை கூறினார்? அதனால் சட்ட சிக்கல்கள் அவருக்குத்தானே ஏற்பட்டுள்ளன என்று பெரும் வருத்தத்தில் உள்ளனர், அவரது ரசிகர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+