ஏன் இத்தனை தடுமாற்றம்.. கொஞ்ச காலமாகவே இப்படித்தான்.. சுழன்றடிக்கும் ரஜினிகாந்த் சர்ச்சைகள்
சென்னை: இதுவரை அப்படி இல்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, திரையில் நாம் பார்த்து ரசித்த வலிமையான ரஜினிகாந்த் என்ற பிம்பம் மெல்ல மெல்ல சரியத் தொடங்கிவிட்டது.
கட்சி துவங்குவேன் என்றும் கட்சி துவங்க மாட்டேன் என்றும் கூறி பல்டி அடித்தது மட்டுமல்ல. இதற்கு முன்பும் சமீப காலமாக சில தடுமாற்றங்கள் ரஜினி பெயரை டேமேஜ் செய்தது உண்மை.
இந்த தடுமாற்றங்களுக்கு காரணம் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வந்த நெருக்கடிகளால்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அப்படி என்ன சொன்னார் ரஜினி?
ரஜினி முடிவால் குஷியோ, குஷி... மக்களுடன், மு.க.ஸ்டாலின் எடுத்த அசத்தல் செல்பிய பாருங்க!
செய்தியாளர் சந்திப்பு
1981ல் நடிகர் ரஜினிகாந்த், லதாவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் வந்தால் உதைப்பேன் என ரஜினிகாந்த் கூறி ஷாக் கொடுத்தார். ஆனால் பிறகு பெரிய அளவுக்கு அவர் பேட்டி சர்ச்சையானது இல்லை. 2017க்குப் பிறகுதான் நிலைமை மோசமானது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்தை பார்த்து, அங்கேயிருந்த பாதிக்கப்பட்ட ஒருவர், நீங்க யாரு? என்று கேட்க கடும் எரிச்சல் அடைந்தார். இதேவேகத்துடன் செய்தியாளர்களிடம் மிகவும் ஆவேசமாக பேசினார். சமூக விரோதிகள்தான், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணம் என்றார். இதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
யார் அந்த 7 பேர்
இதேபோல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எந்த 7 பேர்? என்று ரஜினிகாந்த் கேட்கப் போய் அதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பின்னர் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் ரஜினிகாந்த். 10 பேர் சேர்ந்து ஒரு நபரை எதிர்த்தால் யார் பலசாலி என்று பாஜகவுக்கு எதிராக எதிரணிகள் திரண்டது குறித்து கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக சொன்னார் ரஜினி. ஆனால் பிறகு, அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
துக்ளக் ஆண்டு விழா
ராமர் உருவப்படத்தை, பெரியார் அவமரியாதை செய்தார் என்று துக்ளக் ஆண்டு விழாவில் பேசினார் ரஜினி. துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்ற கருத்து மக்களிடம் இருப்பதாகவும் கூறினார். பெரியார் பற்றிய பேச்சுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் வரை அவர் மீது கேஸ் போடப்பட்டது வரலாறு.
உச்சகட்ட பல்டி
இதன் உச்சமாகத்தான், அரசியல் கட்சியை துவங்க மாட்டேன் என்கிற தொனியில், ஒரு டுவிட் போட்டுவிட்டு, டிசம்பர் 3ம் தேதி மறுபடியும் கட்சி துவங்குவதாக சொல்லிவிட்டு, இன்று கட்சியும் இல்லை, ஒன்னும் இல்லை, படம் முடிஞ்சது, எழுந்து போங்க என சொல்லி பல்டிக்கு மேல் பல்லடியடித்துள்ளார்.
பிரஸ் மீட்டுக்கே பிரஸ் மீட்
இப்படியாக சமூகத்தின் மனநிலைக்கு நேர் எதிராக பேசுவது, அல்லது, பிரஸ் மீட்டுக்கே பிரஸ் மீட் வைத்து விளக்கம் அளிப்பது என ரஜினிக்கு சமீபகாலமாக தடுமாற்றங்கள் அதிகரித்தன. இப்போது, கட்சி ஆரம்பிப்பு அறிவிப்புகளிலும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு குழப்பத்தின் உச்சத்திற்கே ரசிகர்களை தள்ளிவிட்டார். அரசியலுக்கு வருவதில்லை என உறுதியாக இருந்தால், ரஜினியிடமிருந்த அத்தனை குழப்பங்களும் போய்விடும் என்பதே யதார்த்தம்.