எம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி
எம்.ஜி.ஆர். போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தரவர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை ரஜினிகாந்தினால் தரமுடியும் என்று சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை: எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்ய ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து, தி.மு.க.வை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் கட்சித் தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

நல்ல அறிவிப்பு
ரஜினிகாந்த்,ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல அமையக்கூடிய திருப்பத்தை, ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நல்லாட்சியை தருவோம்
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் எம்.ஜி.ஆர் உருவச்சிலை திறப்பு விழாவில் அவர், என்னால் எம்.ஜி.ஆர். போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தரவர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தரமுடியும் என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லியிருந்தார்.

ரஜினிக்கு ஆதரவு
ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான, எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்ய ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து, தி.மு.க.வை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.

மக்களின் நலன்
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications