"வர்லாம் வர்லாம் வா".. ரஜினிக்கு வெச்ச குறி.. அப்படியே யூ டர்ன் ஆகி விஜய் பக்கம் திரும்புமா?
ரஜினியின் முடிவினால் விஜய் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பு, பல பேருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நடிகர் விஜய்யும் ஒருவர்!
விஜய்க்கு உண்மையிலேயே அரசியல் ஆசை கிடையாது.. அவர் அமைதியாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர்.. தன் ரசிகர்களின் நலனே முக்கியம் என்றிருப்பவர்.. யார் வம்பு, தும்புக்கும் போவது இல்லை.. சர்ச்சையாக பேசி மாட்டி கொள்பவரும் இல்லை.
அனைத்திலும் நிதானமான போக்கு.. நிதான பேச்சு.. நிதானமான முடிவுகளை எடுப்பவர்.. அதிரடிகளை இவரிடம் காண முடியாது.. ஒருவித மென்மைப் போக்கில் பயணிப்பவர்.

விஜய்
என்ன ஆனதோ தெரியவில்லை.. இவரை கொண்டு வந்து அரசியலுக்குள் இழுத்துவிட்டுவிட்டனர்.. அதனாலேயே அரசியல் வருகையில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்யும் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது அவரது அப்பாவின் ரொம்ப வருஷ ஆசை.. அதற்கு பிடிகொடுக்காமல் விஜய் விலகி வந்தாலும், தற்போதைய சூழல் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

கட்சி
கடந்த வருடத்தில் இருந்தே விஜய்யா ? ரஜினியா என்ற ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. ரஜினி அரசியல் வருகைக்கு இணையாக விஜய்யின் வருகையும் சரிசமமாக ஒப்பிட்டு பார்க்கப்பட்டும் வருகிறது.. தற்போது ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், விஜய் ஏன் இப்போது களத்தில் குதிக்க கூடாது என்று அவரது தரப்பில் ஆர்வமான கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த்
மற்றொரு பக்கம், விஜய் அரசியல் பேச்சு எழும்போதெல்லாம் பாஜகவின் பேச்சும் சேர்ந்தே பயணித்து வருகிறது.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக விஜய்யை பிரச்சாரம் செய்ய வலியுறுத்தி அழுத்தம் தரப்படுவதாகவும் ஏற்கனவே செய்திகள் கசிந்தன. இதற்கு காரணம், ரஜினிக்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், அவரது ரசிகர்கள் நடுத்தர வயதை கடந்தவர்கள்.. இந்த தலைமுறையை சேர்ந்த நடிகர்களுக்கே இளைஞர்கள் பலர் ரசிகர்களாகவும் உள்ளனர்.

வசூல்
அதனாலேயே ரஜினியின் படத்தைவிட நடிகர் விஜய்யின் படங்கள் அதிக வசூலை ஈட்டுகின்றன.. அதனால்தான், ரஜினிகாந்த்துக்காக விஜய்யை பிரச்சாரம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாக சொல்லப்பட்டது. அதுமட்டுமில்லை, ஒருவேளை ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவில்லை என்றால், வெளிநாட்டில் உள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்ற அழுத்தமும் தரப்பட்டதாக செய்திகள் வந்தன.

என்ன முடிவு?
அந்த வகையில், விஜய் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை... இப்போது ரஜினி அரசியலுக்கே வராத சூழலில், விஜய் யாருக்காக பிரச்சாரம் செய்ய முடியும்? என்ற கேள்வி எழுகிறது.. அதேசமயம், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய வலியுறுத்தப்படலாம் என்று தெரிகிறது.. விஜய் நினைத்தால், பாஜகவுக்கு ஆதரவாகவும் இறங்க முடியும்.. தனியாகவும் களம் காண முடியும்.

வர்லாம் வா..
ஏனென்றால், இப்போது ரஜினி vsவிஜய் என்ற பேச்சுக்கே இடமில்லை.. அரசியல் உலகில் விஜய் தனிநபராக வலம் வர முடியும்.. முடிவுகளை எளிதாகவும் எடுக்க முடியும்.. ரொம்ப வருஷமாக காத்து கிடக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல பதிலை சொல்லவும், வழிநடத்தவும் முடியும்.. ஆக மொத்தம் எல்லாமே விஜய் கையில் உள்ளதால்.. வர்லாம் வா.. வர்லாம் வா என்ற முழக்கங்களும் கேட்க தொடங்கிவிட்டன.












Click it and Unblock the Notifications