அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக.. அப்படியே பிளேட்டை திருப்பிபோட்டு.. ரஜினிக்கு நூல் விடும் சமயோஜிதம்
ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அமைச்சர்கள் கருத்து தெவித்துள்ளனர்
சென்னை: "கொஞ்சம் நஞ்சம் பேச்சாடா பேசுனே நீ" என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே.. அந்த ரேஞ்சுக்கு ரஜினிகாந்த் அரசியலை எதிர்த்து பேசி வந்த அதிமுக, இப்போது தன் நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றி கொண்டு வருகிறது.
இத்தனை காலமும் ரஜினிகாந்த் அரசியல் என்றாலே அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது அதிமுகதான்.. திமுக மறைமுக எதிர்ப்பை காட்டினாலும், அதிமுக அமைச்சர்கள் அதை பகிரங்கமாகவே காட்டி கொண்டனர்.
ஜெயக்குமார் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள், நடிகர்களால் ஆட்சி அமைக்க முடியாது.. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை... முதலில் ரஜினி அரசியல் என்ற சமுத்திரத்தில் குதிக்கட்டும்.. அப்பறம் கருத்து சொல்றோம்.. அரசியலில் இல்லாத ரஜினியை பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்? என்று தெரிவித்து வந்தனர்.
ஓபிஎஸ்
எடப்பாடியாரும் இதையேதான் கருத்து சொல்லி இருந்த நிலையில், ஓபிஎஸ் மட்டும் வித்தியாசமான தன் கருத்தை வெளிப்படுத்தினார்.. அதனால் கட்சிக்குள் அதிருப்தி வெடித்ததே தவிர, ரஜினியை வரவேற்று பேசிய ஓபிஎஸ் கருத்தை யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை.
நிலைப்பாடு
இந்தநிலையில், இவ்வளவு காலம் ரஜினிகாந்த் அரசியலை எதிர்த்து வந்த அதிமுக, இப்போது முதன்முறையாக ரஜினியின் ஆதரவை நாடி உள்ளது.. கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்... அப்போது ரஜினியின் இன்றைய முடிவு குறித்து கேட்டனர்.
சொந்த விருப்பம்
அதற்கு, "ரஜினிகாந்த் அவர் கட்சி ஆரம்பிப்பதும், தொடங்காமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம்.. அதேபோல, தேர்தலின்போது யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய சொந்த விருப்பம். கட்டாயப்படுத்த முடியாது... நண்பர் என்கிற முறையில்தான் முதல்வர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்... மற்றபடி அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
அதுபோலவே, ரஜினி என்றால் முதல் ஆளாக வந்து எதிர் கருத்து சொல்லும் ஜெயக்குமார், "ரஜினிகாந்த், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்... கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும்.. ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்று வரும் பட்சத்தில் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார்... சிஸ்டம் சரி இல்லை என்று கூரியதால் அவர் அதிமுக அரசை குற்றம் கூறவில்லை" என்று கூறியிருக்கிறார்.
பாதிப்புமில்லை
ஆக, இத்தனை பேரும் ரஜினியின் வருகையால் தங்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை என்று சொல்லி வந்தவர்கள்தான்.. இன்று அதே ரஜினியின் ஆதரவை எதிர்நோக்குகிறார்கள் என்றால், ரஜினிக்கு உண்மையிலேயே செல்வாக்கு தமிழகத்தில் இன்னமும் உள்ளது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது.. இவ்வளவு நாள் எதிர்த்து பேசியவர்களே இன்று ஆதரவு கேட்கிறார்கள் என்றால், வலிய வலிய கூப்பிட்டு கால்கடுக்க காத்து கிடந்த கமல், இன்னும் எவ்வளவு ஆதரவை தன் நண்பர் ரஜினியிடம் எதிர்பார்ப்பார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.. இனி, இந்த தேர்தல் முடியும் வரை ரஜினியின் டிமாண்டும் குறைய போவதில்லை.. அவர் மவுசும் குறைய போவதில்லை!