பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு இன்றுடன் பரோல் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு உச்ச நீதிமன்றம் பரோல் வழங்கியது.

பேரறிவாளன் தரப்பு 90 நாட்கள் பரோல் கேட்ட நிலையில், தமிழக அரசுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க மறுத்து இருந்தது. ஏற்கனவே ஜனவரி மாதம் முந்தைய பரோல் முடிந்த காரணத்தாலும், வெளியே கொரோனா காலம் என்பதாலும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.
ஆனால் பேரறிவாளனுக்கு உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தால், சிகிச்சையை காரணம் காட்டி அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் இன்றோடு முடியும் நிலையில், தற்போது பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது அவருக்கு உரிய பாதுகாப்பினை வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுவாக ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு முறை பரோல் கிடைத்தால் மீண்டும் 2 வருடம் கழித்தே பரோல் கிடைக்கும். ஆனால் பேரறிவாளன் உடல்நிலை காரணமாக அவருக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டு அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications