சட்டமன்றம் லைவ் கட் ஆனது எனக்கே தெரியாது.. நேரலை தொடரும்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
சென்னை: சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவை நேரலை போய்க்கொண்டு இருந்தது என்ற நம்பிக்கையில்தான் நானும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இடையில் நான் ரெஸ்ட் ரூம் வரும் போதுதான், லைவ் போகவில்லை என்று சொன்னார்கள் என்றும், அதிகாரிகள் அனைவருடன் பேசி மீதி உள்ள நாட்களில் நேரலை தொடரும் என்றும் ராஜ்மோகன் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:- சட்டப்பேரவை நேரலை போய்க்கொண்டு இருந்தது என்ற நம்பிக்கையில்தான் நானும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இடையில் நான் ரெஸ்ட் ரூம் வரும் போதுதான், அங்கு இருந்த காவலாளிகள் என்னிடம் ரொம்ப நல்லா பேசுறீங்க, லைவ் போகவில்லை என்று சொன்னார்கள். ஏற்கனவே சொன்னதுதான், ஜனநாயகத்தில் சட்டமன்றத்தில் நேரலை தொடரப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

அதிகாரிகள் அனைவருடன் பேசி மீதி உள்ள நாட்களில் நேரலை தொடரும் என்பதே எங்களின் நிலைப்பாடு. சட்டமன்ற நேரலை கட் ஆனது எனக்கு தெரியாது. நான் உள்ளே இருந்ததால், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ரொம்ப ரொம்ப காட்டவே முடியாத பிரச்சினை இருந்தால் அதுபோன்ற முடிவு எடுக்கலாம்.
அவை நாகரீகம் இல்லாத வார்த்தையை பயன்படுத்தினால் அதுபோன்ற முடிவு எடுக்கலாம். ஸ்மூத் ஆகவே சட்டமன்றம் சென்றது.. நேரலை தொடரும். ராயபுரம் எம்.எல்.ஏ அடிக்க பாயவில்லை. அவர் பின்னாடி இருந்தார். என்ன விஷயம் என்று தெரியாமல் கொஞ்சம் எழுந்து பார்த்தார். வன்முறை எதுவும் இல்லை.. சட்டமன்றம் சுமூகமாகவே சென்றது" என்றார்.
தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டம் நேற்று முன் தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றினார். தமிழக சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்ற லைவ் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், தவெக அரசு நேரலை ஒளிபரப்பு செய்யும் என்று கூறியதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் லைவ் திடீரென நிறுத்தப்பட்டது. நேரலை ரத்து செய்யப்பட்டதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் என சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, சட்டமன்றத்தில் நேரலையை முடக்குவது நியாயமற்றது.
உடனே நேரலை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்தான், சட்டமன்றத்தில் நேரலை தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications