நாடாளுமன்றத்தில் தவெக-வின் முதல் அடி? குறுக்கே வந்த காங்கிரஸ் தலை.. ராஜ்யசபா சீட் யாருக்கு?
சென்னை: சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி இடத்திற்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக - காங்கிரஸ் இடையே இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தகட்ட நகர்வை நோக்கி விறுவிறுப்பாக நகரத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள அந்த ஒரு இடத்திற்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மத்தியில் முத்திரை பதிக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் சாதகமாக இருப்பதால், இந்த ஒரு இடத்தை அக்கட்சி எளிதாகக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஸில் இருக்கும் தவெக பிரமுகர்கள்
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழையப் போகும் அந்த தவெக எம்.பி யார்? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே எகிறியுள்ளது. தற்போது அரசியல் வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, சில முக்கிய பெயர்கள் பலத்த பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது:
ரவி: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி.
ஜான் ஆரோக்கியசாமி: விஜய்யின் அரசியல் ஆலோசகர்.
ஜெகதீஷ்: விஜய்யின் மிக நெருங்கிய நண்பர்.
இவர்களில் ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், தற்போது அங்கே ஒரு ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.
காங்கிரஸ் போட்ட ஸ்கெட்ச்
அரசியல் வட்டாரங்களை அதிர வைக்கும் புதிய தகவலாக, இந்த ராஜ்யசபா சீட்டை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் மேலிடம் தவெக-விடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைவதற்குக் திரைமறைவில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டவர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி. இதனால், அவருக்கு இந்த ராஜ்யசபா ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், தவெக தரப்பும் இதை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், தவெக கூட்டணியின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி களம் காண அதிக வாய்ப்புள்ளது.
தேசிய அளவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் இந்த ஜூன் 18 தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது:
மகாராஷ்டிரா: அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் பாராமதி இடைத்தேர்தலில் வென்றதால், தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த இடத்திற்கும் ஜூன் 18-ல் தேர்தல் நடக்கிறது.
பிற மாநிலங்கள்: கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா மற்றும் மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங், ஜார்ஜ் குரியன் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மூத்த எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
வேட்புமனு தாக்கல்: ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை
தேர்தல் நாள்: ஜூன் 18
விஜய்யின் தவெக தனது சொந்தக் கட்சி நிர்வாகியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்திக்கு வழிவிடுமா? இன்னும் சில நாட்களில் இதற்கான விடை தெரிந்துவிடும். முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் வாய்ப்பை தவெக தவற விடாது என்கின்றனர் கட்சியினர்.












Click it and Unblock the Notifications