திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டன.
எழுத்தாளர்களை கொண்டாடும் திமுக அரசு! 6 பேருக்கு வீட்டு வசதி வாரியத்தில் இலவச குடியிருப்பு ஒதுக்கீடு!
திமுக, காங்கிரஸ்
அதன் அடிப்படையில் திமுக 3 இடங்களில் போட்டியிடுவதாகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகவும் அறிவித்தது. அதன் அடிப்படையில் திமுகவை சேர்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரை திமுக தேர்வு செய்தது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர்கள்
அதேபோல் 2 இடங்களுக்கு போட்டியிடும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. அந்த வகையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.பரதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல்
கடந்த 27 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மூவரும் வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக வேட்பாளர்கள் இருவரும், காங்கிரஸ் வேட்பாளரும் கடந்த 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் அல்லாமல் 7 சுயேட்சைகள் மாநிலங்கலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
6 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு
வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 1 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 7 சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் எம்.எல்.ஏக்களின் முன்மொழிவின்றி தாக்கல் செய்யப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன.
போட்டியின்றி தேர்வு
வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 3 ஆம் தேதியான இன்று நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து திமுகவை சேர்ந்த 3 பேர், அதிமுகவை சேர்ந்த 2 பேர், ஒரு காங்கிரஸ் வேட்பாளர் என 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.