தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? “அப்புறம் சொல்றோம்”.. நேரடியாக பதில் சொல்லாமல் நழுவிய எடப்பாடி!
சென்னை: ராஜ்யசபா சீட் கிடைக்கும் என நம்பி வந்த தேமுதிக, எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளால் அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அப்போது உறுதி செய்திருந்தார்.

ராஜ்யசபா சீட்
ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அதிமுக சார்பில் வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் பொறுமை காக்கும்படி தேமுதிகவுக்கு அதிமுக தலைவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக கூறியது என்ன என்பது குறித்து அண்மையில் விளக்கம் அளித்தார்.
எல்.கே.சுதீஷ் வருத்தம்
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மைதான். அது குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும் என அதிமுக கூறியது. அதனால் தான் நான் எம்.பி தேர்தலில் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அதுகுறித்து பேசுவேன் என்றும் எல்கே சுதீஷ் தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்ற அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், ராஜ்யசபா சீட் பற்றி பேசி இருந்தார். ராஜ்யசபா சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்த நிலையில் எல்.கே சுதீஷ் இவ்வாறு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுகுறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பதில் அளிக்க மறுத்த எடப்பாடி
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்து, முதலில் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளோம். இன்னும் 9 மாத காலம் இருப்பதால், இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் அமையும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்."
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக எல்.கே.சுதீஷ் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதைப் பற்றி பின்பு தெளிவாக ஊடகத்தினருக்கு தெரிவிக்கப்படும்" எனக் கூறியுள்ளார். ராஜ்யசபா சீட் தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications