அனுமதியின்றி பேரணி.. முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை.. ஹைகோர்ட் அனுமதி
சென்னை: அனுமதியில்லாமல் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான பேரணியில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடந்த 23 ம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பேரணிக்கு தடை விதிக்க கோரி இயக்குனர் வாராகி மற்றும் சென்னை ஆவடியை சேர்ந்த எழிலரசு ஆகியோர் சென்னை
உயர்நீ்திமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர்..
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில்,தடையை மீறி பேரணி நடக்கும் பட்சத்தில் அதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து சமர்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது,

வீடியோ பதிவுகள்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு முழுவதுமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது..

கூட்டணி தலைவர்கள்
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், காவல்துறையின் தடையை மீறி பேரணி சென்றதற்காக எழும்பூர் ( F - 2 ) காவல் நிலையத்தில்
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வை.கோ, திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட 14,125 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் எடுத்துரைத்தார்....

அசம்பாவிதம் இல்லை
மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் காவல்துறை விழிப்போடு செயல்பட்டு, பேரணியில் கலவரம் எதுவும் நடைபெறாமல் பார்த்து கொண்டதாகவும் எடுத்துரைத்தார்..

சட்ட நடவடிக்கை
காவல்துறையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், தடையை மீறி பேரணி சென்ற விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்...












Click it and Unblock the Notifications