வில்லேந்திய ராமர்.. சென்னையில் எழுந்தருளிய பிரம்மாண்ட ராமர்... சிலிர்க்கும் பக்தர்கள்
சென்னை: நாடு முழுவதும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றிய பேச்சாக உள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காண நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்களுக்கு உத்திரப்பிரதேச அரசு மற்றும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சாஸ்திர டிரஸ்ட் சார்பிலும் பிரம்மாண்ட சிறப்பு ஏற்பாடு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை மக்கள் வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக ஒன்றரை அடி பீடத்தின் மீது அமைத்துள்ளனர். ராமரின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்து, இடது காலை முன்னே வைத்தபடி கம்பீரமாக மன்னர் கோலத்தில் ராமர் காட்சி தருகிறார். இந்த ராமரை மக்கள் பிரம்மிப்புடன் பார்த்து செல்கின்றனர்.

கோவிலுக்கு வந்து காண முடியாத பக்தர்களும் சாலையில் செல்லும் போதே பார்த்து ஸ்ரீராமரை தரிசிப்பதற்கு வசதியாக வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் சிலையில் ராமருக்கு உடை, தங்க ஆபரணங்கள், வில் என அனைத்தும் மிகவும் தத்ரூபமாக, காண்போரின் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் சிலை தெய்வீகமாக முகப்பொலிவுடன் நீல நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஏராளமானோர் வந்து வணங்கி செல்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தி. நகர் வெங்கடாசலபதி கோவிலில் பஜனைகள், சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் என பல்வேறு வகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வைக்கப்படவுள்ள சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யோகி ராஜ் என்ற சிற்பக் கலைஞர் வடித்துள்ளார். இந்த சிலை 51 இன்ச் உயரம் கொண்டது. அயோத்தி கோயிலில் இந்த சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் புனித நீர் ஊற்றப்படும். இதற்காக 155 நாடுகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, அயோத்தியில் சேகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications