திருப்பதி ஏழுமலையான்.. மதுரை மீனாட்சி.. இந்தியாவில் அதிக சொத்துமதிப்புள்ள கோவில்கள் எவை தெரியுமா?
சென்னை: அயோத்தியில் ராமர் கோவிலில் பால ராமர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோவிலின் பிரம்மாண்டம் பற்றி உலகமே பேசி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள அதிக பணக்கார கோவில்கள் வருமானம் அதிகம் வரும் கோவில்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
பணக்கார கோவில்கள்: நாடு முழுவதும் எத்தனையோ கோவில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான பல கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அனைத்திற்குமே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வதில்லை. சில கோவில்களுக்கு பரிகாரத்திற்காக மட்டுமே செல்வார்கள். ஒரு சில கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்தியாவில் ஏராளமான பாரம்பரியம் மிக்க கோவில்கள் உள்ளன. கட்டிடக்கலை, சிற்பக்கலை அம்சங்கள் கொண்ட பல கோவில்கள் இருந்தாலும் சில கோவில்களில் மட்டுமே வருமானம் அதிகரிக்கும். அதற்குக் காரணம் அந்த கோவில் மீதும் இறைவன் மீதும் பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான்.

திருப்பதி ஏழுமலையான்: ஆந்திரா மாநிலத்தில் உள்ளது ஏழுமலையான் கோவில். கலியுகத்தில் கண் கண்ட தெய்வதாக ஏழுமலையான் பார்க்கப்படுவதால் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, கோடிக் கணக்கில் காணிக்கை செலுத்துகின்றனர். தினசரியும் 75000 பக்தர்கள் வந்து ஏழுமலையானை வணங்கி செல்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சொத்து மதிப்பின் படி, ஏழுமலையான் கோவிலின் சொத்து மதிப்பு ரூ 3 லட்சம் கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. தங்கம், வைரம் என டன் கணக்கில் நகைகள் இந்த ஆலயத்திற்கு உள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் திருமலை சீனிவாச பெருமாள் கோவில் சுயம்புவாக தோன்றி தலம் என சொல்லப்படுகிறது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு பத்மநாப சுவாமியாக, ஆதிஷேசன் மீது அனந்த சயன கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இங்குள்ள மூலவரை மூன்று கதவுகள் வழியாக நாம் தரிசிக்க முடியும். முதல் கதவு வழியாக மூலவரின் முகத்தையும், இரண்டாவது கதவு வழியாக சுவாமியின் நாபிக்கமலத்தில் இருந்து உதித்த பிரம்மாவையும், மூன்றாவது கதவின் வழியாக சுவாமியின் திருவடியையும் தரிசிக்க முடியும். இக்கோவிலின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு என இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் இந்தியாவிலேயே அதிக சொத்துக்கள் கொண்ட கோவிலில் ஒன்றாக இது கணக்கிடப்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி கோவில்: காஷ்மீரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 52,000 அடி உயரத்தில் குகை கோவிலாக அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோவில். பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி தரும் தாயாக உள்ளதால் இந்த அம்பிகையை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டே உள்ளனர். இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நன்கொடையாக மட்டும் கிடைக்கிறது.
குருவாயூர்: கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் ஆலயம் மக்களால் குருவாயூரப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் துவாரகை என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர் மற்றும் தென்னிந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றான இக்கோவிலுக்கு தினமும் சுமார் 40,000 முதல் 50,000 பேர் வந்து செல்கின்றனர். சுமார் 230 ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. இக்கோவிலில் விலையுயர்ந்த தங்கமும் வெள்ளியும் வைர நகைகளும் உள்ளன. இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு 2500 கோடியாகும்.
பஞ்சாப் பொற்கோவில்: சீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தங்கத் தகடு வேயப்பட்டுள்ள இந்த கோவிக்கு உள்ளே 'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலை உயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2000 கோடிகளுக்கு மேல் இருக்கலாம் என்று சொல்லபடுகிறது.
சீரடி சாய்பாபா கோவில்: மகாராஷ்டிராவின் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகவும், அதிகமான பக்தர்கள் வரும் கோவிலாகவும் கருதப்படுகிறது. ஷீரடி சாய் பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் இக்கோவிலில் வருடத்திற்கு ரூ.360 கோடி நன்கொடையாக கிடைக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் : தமிழ்நாட்டில் மதுரையில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். புராண சிறப்பு கொண்ட இந்த ஆலயம் தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்லும் ஆலயமாகும். சிவனும் பார்வதியும் மதுரையில் பல திருவிளையாடல்களை நிகழ்த்திய தலமாக போற்றப்படுகிறது. சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தது. பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் கட்டிடக்கலை, சிற்பக் கலைக்கு ஒன்றாக சான்றாக உள்ளது. அதிக வருமானம் வரும் கோவில்களில் 7வது இடத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலங்களும் சொத்துக்களும் அதிகம் உள்ளன.
சபரிமலை ஐயப்பன்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலானது கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியாறு புலிகள் காப்பகம் அருகில் அமைந்துள்ளது. உலகிலேயே அதிக பக்தர்கள் கூடும் கோவில்களில் இதுவும் ஒன்று. வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே திறக்கப்படும் இக்கோவிலில் வருடத்திற்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கிறது.
அயோத்தி ராமர் கோவில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகளுக்காக பல ஆயிரம் கோடி டொனேசன் கிடைத்துள்ளது. கோவில் கட்டியது போல டொனேசனாக கிடைத்த பணம் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வதற்காக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த ஆலயத்திற்கு வந்த பக்தர்களின எண்ணிக்கையும் வருமானம் எவ்வளவு என்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications