ஆஹா! ஒண்ணு கூடிட்டாங்களே! கண்கள் பனிக்க.. இதயம் இனிக்க! ஒன்று சேர்ந்த அப்பா-மகன்! வேதனையில் ஜிகே மணி
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியில் புதிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த உள்கட்சி மோதலுக்கு முடிவு கட்டும் வகையில் அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்துள்ள நிலையில், மறுபுறம் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பாமகவில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடு கடந்த சில ஆண்டுகளாக வெளிப்படையாகவே இருந்து வந்தது. இதனால் கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டது.

குறிப்பாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த பிளவு மேலும் வெளிச்சத்துக்கு வந்தது. ஒருபுறம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மறுபுறம் ராமதாஸ் ஆதரவு பெற்ற அணியினர் தனியாக போட்டியிட்டனர்.
பாமக மோதல்
தேர்தல் முடிவுகள் வெளியாகியபோது, அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. குறிப்பாக சவுமியா அன்புமணி சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ராமதாஸ் அணியினருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த சூழலில், ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியினரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சந்திப்பு பாமகவினரிடையே கவனத்தை பெற்றுள்ளது.
அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
தைலாபுரம் தோட்ட இல்லத்துக்கு தனது மனைவி மற்றும் மகள்களுடன் சென்ற அன்புமணி ராமதாஸ், தந்தை ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி உணர்ச்சிவசப்பட்டனர். பல மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு, பாமகவில் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை கட்சி நிர்வாகிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
அன்புமணி ராமதாஸ்
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தந்தை, தாயை குடும்பத்துடன் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றோம். இனி எல்லாம் நல்லதே நடக்கும்" என்று கூறியிருந்தார். இந்த ஒரு கருத்தே பாமக தொண்டர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரான ஜி.கே. மணி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக பாமகவின் முக்கிய முகமாக இருந்து வந்த ஜி.கே. மணி, அரசியல் பணிகளில் இருந்து படிப்படியாக விலகி ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிகே மணி
பாமகவில் நீண்ட காலமாக பணியாற்றிய ஜி.கே. மணி, கட்சியின் ஆரம்ப காலம் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலத் தலைவர் என பல்வேறு நிலைகளில் கட்சிக்காக பணியாற்றியுள்ளார். கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் நேரங்களில் அவரது ஆலோசனைக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக மோதலுக்கு அவர் தான் காரணம் என சில நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்.
தமிழ் குமரன்
இப்போது தந்தை மகன் சேர்ந்துள்ள நிலையில், ஓய்வு முடிவுக்கு வந்துள்ளாராம். மேலும், அவரது ஓய்வு முடிவுக்கு பின்னணியில் குடும்ப காரணங்களும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவரது மகன் தமிழ் குமரன் தற்போது காங்கிரஸுடன் பயணித்து வருவதும் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தமிழ் குமரன், பாமகவில் இருந்து விலகி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் பெற்றார். எனினும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
பாமகவில் பாலிடிக்ஸ்
இதனால், அன்புமணிக்கு எதிராக பாமகவில் பாலிடிக்ஸ் செய்ய முடியாது என்ற நோக்கில் ஜி.கே. மணி நேரடி அரசியலில் இருந்து விலகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக ஜி.கே. மணி அல்லது அவரது ஆதரவாளர்கள் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு கட்சிக்குள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நிலையில், ஜி.கே. மணி ஓய்வு குறித்த தகவல் தான் தற்போது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications