படபடக்கும் பாமக.. தாத்தாவுடன் அவசர மீட்டிங்! தைலாபுரத்துக்குள் நுழைந்த முகுந்தன்! என்ன பேசினார்?
சென்னை: பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் முற்றி வருகிறது. பொது வெளியில் தந்தையிடம் மன்னிப்பு கேட்டும் விட்டுக் கொடுக்காத ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு மாவட்டச் செயலாளர்களையும் தலைவர்களையும் நீக்கி வருகிறார். இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகிய முகுந்தன், தாத்தா ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நூலும் சேலையும் போல் இருந்த தந்தை மகன் தற்போது எதிரும் புதிருமாக இருக்கின்றனர். பாமகவின் எதிர்காலம் கருதி அன்புமணியை தலைவராக நியமனம் செய்தார் ராமதாஸ்.
அதற்கு பிறகு கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள், வேட்பாளர் தேர்வு என அன்புமணி தான் பாமகவை தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் நியமனம், தலைவர் பதவியை பறித்தது உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக அன்புமணிக்கு கட்சிக்குள்ளேயே சிலர் எதிராக வேலை பார்க்கத் தொடங்கினர்.

குறிப்பாக இளைஞரணி தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அன்புமணியால் சில சீனியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் ஜிகே மணி. அன்புமணி ராமதாஸ் இளைஞரணி தலைவராக இருந்த நிலையில் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருந்த ஜிகே மணி நீக்கப்பட்டு அந்த பதவி அன்புமணி ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. இதை அடுத்து பாமகவின் கௌரவ தலைவராக ஜிகே மணி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவியை தனது மகன் ஜிகேஎம் தமிழ் குமரனுக்கு பெற்றுத் தந்தார் ஜிகே மணி. தமிழ் குமரன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் சினிமா பிசினஸ் காரணமாக அரசியலை கவனிக்க முடியாமல் போனதால், செயல்படாமல் இருக்கும் தமிழ் குமரனை நீக்க வேண்டும் என அன்புமணி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து தாமாகவே தமிழ் குமரன் பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவராக ராமதாஸின் பேரன் முகுந்தன் நியமனம் செய்யப்பட்டார். கட்சியில் சேர்ந்த உடனேயே முகுந்தனுக்கு பதவியா என ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என ராமதாஸ் பதில் சொல்ல, அப்போதிருந்து இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்தது. இதற்கு இடையே வன்னியர் சங்க மாநாட்டுப் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கிவிட்டு அவரை செயல் தலைவராக நியமித்ததாக ராமதாஸ் கூறினார். இதனால் அன்புமணி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து வன்னியர் சங்க மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அங்கும் சில கருத்துக்களை ராமதாஸ் தெரிவிக்க தந்தை மகன் இடையே மோதல் வலுத்தது. தொடர்ந்து இருதரப்பும் நேரடியாக மோதலில் ஈடுபட்ட நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால் பொதுக்குழுவின் முடிவின்படி தான் தான் தலைவர் எனக் கூறிய அன்புமணி நிர்வாகிகளை மீண்டும் நியமனம் செய்வதாக அறிவித்ததோடு தற்போது மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க அன்புமணியின் ஆதரவாளர்கள் அவரால் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தலைவர்களை நீக்கி வருகிறார் ராமதாஸ். இப்படி பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்க தன்னால் தான் கட்சியில் பிரச்சனை என உணர்ந்த ராமதாஸின் பேரன் முகுந்தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராமதாஸ் குலதெய்வம் அன்புமணி தான் எதிர்காலம் என தனது கடிதத்தில் முகுந்தன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கட்சியில் பிரச்சனைக்கு குடும்பம் தான் காரணம் என பொதுவெளியில் பேசப்படுவதால் ராமதாஸின் குடும்பத்தினர் சற்றே அதிருப்தியில் இருக்கின்றனர். எப்படியாவது ராமதாஸையும் அன்புமணி ராமதாஸையும் இணைத்து விட வேண்டும் என ராமதாஸின் மகள் காந்தியும் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் தைலாபுரத்தில் தாத்தாவை சந்தித்து பேசி இருக்கிறார் பாமக இளைஞரணி முன்னாள் தலைவரான முகுந்தன்.
பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் இடையே சமாதான முயற்சிகளில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் சந்தித்து பேசினார். கட்சி தொடர்பாகவும், பிளவை சரி செய்து கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் அவர் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications