சூப்பர்! புயல் முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கை சிறப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி, ராமதாஸ் பாராட்டு!
சென்னை : மாண்டஸ் புயல், பெரும் சேதங்களை ஏற்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்ததற்கும், துரித நடவடிக்கைகளுக்கும் திமுக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம், அரசுக்கு பாராட்டுகள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் கரையைக் கடந்தாலும் காற்று வீசும்..2 நாட்களுக்கு மிக கனமழை நீடிக்கும்..6 மாவட்ட மக்களே உஷார்
மாண்டஸ் புயல்
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவுக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது. இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டுகள் இருந்த போதும் அவை துரிதமாக சரிசெய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து. மேலும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும், பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வந்தது. இதன் காரணமாக பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
அரசுக்கு பாராட்டு
இந்நிலையில் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கில் செலவாகும்
மேலும், "அதே நேரத்தில் கடலோரப்பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் இடிந்துள்ளன. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வீடுகள்
மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்; மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ்
மேலும், மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என பாமக நிறுவனர் ராமதாஸும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது.
திமுக அரசுக்கு பாராட்டு
பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர். புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்!" எனத் தெரிவித்துள்ளார்.
உரிய இழப்பீடு
மேலும், "நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.