அன்புமணி.. அடிமடியிலேயே கை வைத்த ராமதாஸ் தரப்பு.. ராஜ்யசபா எம்.பி பதவிக்கு எதிராக வழக்கு!
சென்னை: மாநிலங்களவை எம்.பி ஆக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினராக இல்லாத அன்புமணி, போலியான ஆவணங்கள் அளித்து முறைகேடாக ராஜ்யசபா எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமக, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

அன்புமணிக்கு எதிராக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சியின் நிறுவனர் தான் தான் என்றும், தனக்கே கட்சி சொந்தம் என்றும் உரிமை கொண்டாடினார் ராமதாஸ். ராமதாஸின் குரலை தேர்தல் ஆணையம் செவிமடுக்கவில்லை. மாம்பழம் சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரி வந்தார் ராமதாஸ்.
உயர் நீதிமன்றம், அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார் ராமதாஸ். பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார் ராமதாஸ். இந்த வழக்கில், தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி ஆக பாமக தலைவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினராக இல்லாத அன்புமணி, போலியான ஆவணங்கள் அளித்து முறைகேடாக ராஜ்யசபா எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பாமகவின் உறுப்பினராக இல்லாத நிலையில், அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி ராமதாஸ் தரப்பு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். போலியான ஆவணங்களை அளித்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாகவும் அவரது மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைந்ததை ஒட்டி, இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைத்தன.
இதனையடுத்து திமுக சார்பில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் எம். தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 6 வேட்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி என மொத்தம் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications