தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் -ராமதாஸ்
சென்னை: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடத்தப்படுவதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
குரேஷி கருத்து
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை.
ராமதாஸ் விமர்சனம்
கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
நம்பகத் தன்மை
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும்.
கசப்பான பாடம்
கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலிலும் மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கருத்துக்கணிப்புகள் உருவாக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ்.