இறங்கி வந்த ராமதாஸ்! அன்புமணி உடன் சமாதானம்? 3 நாளுக்கு பிறகு பாமக நிறுவனர் என குறிப்பிட்டு அறிக்கை!
சென்னை: பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் சமாதானம் அடைந்துள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. இன்று ராமதாஸ் சார்பில் பாமக நிறுவனர் என்ற பெயருடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் பாமகவின் தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் தான் பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்று கூறியிருந்தார். இது பாமகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாமக தலைவர்
அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு (ஏப்ரல் 12) தன்னை பாமக தலைவர் என்று குறிப்பிட்டதோடு தலைமை நிலைய பதிவு என ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய பாமக நிறுவனர் என்னை ராமதாஸ் மாநாட்டுக்குழு தலைவராக நியமித்திருக்கிறார். அரசியல் களத்தில் அவரின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை.
2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்" என்றும் தெரிவித்திருந்தார்.

ராமதாஸ் ஆலோசனை
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தைலாபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியானது. பாமக தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பாகவும் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமதாஸ் சமாதானம் அடைந்து விட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. பாமக நிறுவனர் என்ற பெயரிலேயே ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், இன்று நிறுவனர் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளதன் காரணமாக, அவர் அன்புமணி உடன் சமாதானம் அடைந்து விட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் பெயரில் அறிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும், சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.
சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.
சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டி இந்த முடிவை அறிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மேலும் பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணி, கவுரவுத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
பாமகவில் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி முடிவுகள் தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்குழுவில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் ராமதாஸ். முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
தனது அப்பா ராமதாஸிடம் மேடையிலேயே வாக்குவாதம் செய்தார் அன்புமணி. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் தனது தொலைபேசி எண்ணை அறிவித்த அன்புமணி ராமதாஸ் தன்னைச் சந்திக்க விரும்புபவர்கள் பனையூர் வந்து சந்திக்கலாம் என கூறிவிட்டு கோபமாக வெளியேறினார். இதையடுத்து நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
அன்புமணி - முகுந்தன் சந்திப்பு
பின்னர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று சந்தித்த அன்புமணி, சமாதானம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் பாமகவுக்குள் மோதல் வெடித்தது. இந்தச் சூழலில் தான் இன்று ராமதாஸ் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னையை அடுத்து பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு முகுந்தன் பரசுராமன் சென்றார். கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் மோதல் வெடித்தது. தற்போது பாமகவின் தலைவர் யார் என்பதில் ராமதாஸ் - அன்புமணி இடையே பனிப்போர் நிலவிவரும் சூழலில் முகுந்தன் பரசுராமன் அன்புமணியின் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications