ராமதாஸ் - அன்புமணியை சேர்த்து வைக்க உண்ணாவிரதம் அறிவித்த மா.செ.. டென்ஷன் ஆன தைலாபுரம் தலை!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒற்றுமையாக இணைந்து கட்சியை வழிநடத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை பாமக நிர்வாகி அறிவித்ததால் ராமதாஸ் டென்ஷன் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார்.

அண்மையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் மற்றும் குடும்ப விவகாரங்கள் என அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் ராமதாஸ். இந்த குற்றச்சாட்டு பொய்யானது என அன்புமணி கூறி இருந்தார். இருவருக்கும் இடையே பனிப்போர் தொடர்கிறது.
இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இருவருக்கும் இடையே இன்னும் சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்புமணி.
இந்தநிலையில், ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றிணைய வலியுறுத்தி பல நிர்வாகிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், ராமதாஸின் ஆதரவாளரான தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் ஒன்றிணைய வலியுறுத்தி நாளை (ஜூன் 23) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பெரியார் - அம்பேத்கர் - கார்ல் மார்க்ஸ் சிலைக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ம.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த போராட்டத்தில் வன்னியர் சொந்தங்கள் மற்றும் பாமகவினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ம.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "யாரைக் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தாய்? தைலாபுரத்தில் என்னை கேட்காமல் வந்து போராட்டம் நடத்துவாயா" என்று கோபமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ம.க.ஸ்டாலின் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் அன்புமணி, மாவட்ட வாரியாகச் சென்று பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், ராமதாஸ் ஆதரவாளரின் இந்த அறிவிப்பு பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications