விடை கிடைக்காத ராமஜெயம் கொலை வழக்கு.. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விடை கிடைக்காத மர்மமாக நீண்டு கொண்டே இருக்கிறது ராமஜெயம் கொலை வழக்கு. 12 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012ஆம் தேதி வாக்கிங் சென்ற போது மாயமானார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு சில மணி நேரங்களில் திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலைப் பகுதியிலுள்ள முட்புதரில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இவ்வழக்கு கடந்த 2012 ஆண்டு ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 7.11.2017-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர், ராமஜெயத்தின் நண்பர்கள், சந்தேக நபர்கள், பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. இதுகுறித்து கே.என்.நேரு தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் கூறியபோது, "ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்தனர். 300க்கும் மேற்பட்டவர்களிடம் எழுத்துபூர்வமாக சிலவற்றை எழுதி வாங்கினர்.
சுமார் 5 ஆண்டுகள் விசாரணை நடத்திய நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 8 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களும் கடைசிவரை குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின் கடந்த 2017ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ ஆரம்பத்தில் இருந்து விசாரணையைத் தொடங்கியது. கொலைக்கான காரணம், கொலையின் சூத்திரதாரி யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவேயில்லை. இதனையடுத்து மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கே.என்.நேருவின் மற்ற சகோதரர் ஆன ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. அந்த குழுவில் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். 13 பேரை பிடித்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன; பல அமைப்புகள் விசாரித்துவிட்டன என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்தார். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது ரவிசந்திரன் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புகிறதாகவும் மனுதாரர் ரவிசந்திரன் தரப்பில் தெரிவித்தனர். அரசு தரப்பில் இதுவரை 1,040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், சாட்சிகள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அதன் விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.
எத்தனையோ கொலைக்கான காரணங்களையும், குற்றவாளிகளையும் துப்பு துலக்கி கண்டுபிடித்துள்ள தமிழ்நாடு காவல்துறையால் அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் விஐபியுமான ராமஜெயம் கொலை வழக்கில் மட்டும் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கான மர்மம் யாராலும் விளங்க முடியாத புதிராகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications