ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா... அழைப்பிதழ் பெயர் சர்ச்சை
சென்னை: ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா நாளை (25.11.19) கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ் கடைசிகட்டத்தில் நேற்று தான் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அழைப்பிதழில் பாமக ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பெயர் அச்சிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ராமசாமி படையாச்சியார் படம் திறக்கப்பட்ட போது, பாமகவிற்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூரில் விழா
வன்னிய சமுதாயத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரின் நினைவு மண்டப திறப்பு விழா நாளை கடலூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அந்த மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட நிர்வாகமும், அமைச்சர் எம்.சி.சம்பத்தும் செய்து வருகிறார்கள்.

அன்புமணி பெயர் தவிர்ப்பு
ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி அரசு விழா என்பதால் அதற்கான அழைப்பிதழில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பெயர் போடப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யான திருமாவளவன் பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது தான் பலரதை புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. ஆனால் அதே நேரம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் ராஜய்சபா எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

கோ.க.மணி பங்கேற்பு
மேலும், ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் நேற்று தான் பாமகவிற்கு தரப்பட்டுள்ளது. விழா நாளை நடைபெற இருக்க அதற்கு ஒரு நாள் முன்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டதை பாமக தலைமை ரசிக்கவில்லை. இதனால், விழாவில் பாமக தலைவர் கோ.க.மணி மட்டும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

சாலை சீரமைப்பு
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடலூருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வதால் அவரை வரவேற்க மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனிடையே மாவட்ட நிர்வாகமும் முதல்வர் வருகையையொட்டி குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்து பளபளவென மாற்றிவிட்டது.












Click it and Unblock the Notifications