Exclusive: இது தான் காரணம்..! தமிழகத்தில் பாஜக வளரவே வளராது! போட்டுத்தாக்கும் ராமசுப்ரமணியன்!
சென்னை: நெகட்டிவ் பாலிடிக்ஸ் செய்யும் வரை தமிழகத்தில் பாஜக வளரவே வளராது என அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஆர்.எஸ்.எஸ்.வாதியுமான ராமசுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video

கோயில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கு வசதியை மேம்படுத்துவதற்காக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் தன்னையும் இடம்பெறச் செய்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

குழுவில் இடம்
''கோயில்கள் கண்காணிப்பு குழுவில் என்னை உறுப்பினராக நியமனம் செய்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னை பொறுத்த வரை நான் இதனை ஒரு பொறுப்பாக தான் பார்க்கிறேன். ஆன்மிக ஜாம்பவான்கள் என அறியப்படும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட இன்னும் பல பெரியவர்களோடு இணைந்து பணியாற்றப் போகிறேன் என்பதை நினைத்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.''

பாஜக செய்தித்தொடர்பாளர்
''திமுகவை ஒரு காலத்தில் நான் திட்டியது உண்மை தான், ஆனால் அது தனிப்பட்ட எனது கோபம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போது பாஜகவில் செய்தித் தொடர்பாளராக இருந்தேன், நான் வகித்த பதவிக்கு உரியபடி செயல்பட்டேன். இப்போது சரி எது தவறு எது என்பதை அறிந்து பேசி வருகிறேன். திமுகவை இந்துவிரோதி கட்சி என்று வேண்டுமென்றே கூறுவதை ஏற்க இயலாது. எதற்கெடுத்தாலும் ஸ்டாலினுக்கு தொடர்புண்டு என பாஜகவினர் கூறுவதை எப்படி ஏற்பது. இதனால் தான் கருப்பர் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பில்லை என நான் பேசினேன்.''

ஆன்மிகம் அறிந்தவன்
''அதேபோல் தமிழகத்தில் வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக கூத்து நடத்தியது. நானும் ஆன்மிகம் அறிந்தவன் தான், அதில் இப்படியெல்லாம் செய்யச் சொல்லவில்லையே, அதனால் அதையும் நான் விமர்சித்தேன். அதேபோல் நான் ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க விரும்பமாட்டேன். எந்தக் கட்சியை சேர்ந்தவர் வேண்டுமானாலும் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து செயல்படலாம். அதனால் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் இணைக்கத் தேவையில்லை.''

ஆன்மிக டூரிஸம்
''தமிழகத்தில் ஆன்மிக டூரிஸத்தை மேம்படுத்துவது குறித்து அரசுக்கு யோசனை தெரிவிப்பேன், அதேபோல் கோயில்களின் சிறப்புகளை பக்தர்கள் அறிவதற்கும், பாழடைந்த கோயில்களை புனரமைக்கவும், கோயில் பட்டாட்சாரியர்கள் உட்பட அனைவரது நலனுக்காகவும் அரசுக்கு ஆலோசனை தெரிவிப்பேன். முன்னதாக முதலில் முதலமைச்சரையும், அமைச்சர் சேகர்பாபுவையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன். அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களை பற்றிய விவரமும் ஆழமாக தெரிகிறது. இல.கணேசன் அவர்கள் என்னிடம் பேசிய போது சேகர்பாபுவின் நடவடிக்கையை பாராட்டினார்.''

நெகட்டிவ் அரசியல்
''தமிழகத்தில் பாஜக நெகட்டிவ் அரசியல் செய்தால் ஒரு போதும் வளரவே முடியாது. எதற்கெடுத்தாலும் திமுகவை இந்து விரோதக் கட்சி என்பது போல் சித்தரித்து எதிர்மறையாக பேசிக்கொண்டிருந்தால் யாரும் ரசிக்கமாட்டார்கள். கோயில் திருப்பணிகளுக்கு திமுக கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் இதுவரை வேறு எந்தக் கட்சியும் கொடுத்ததில்லை. இந்தச் சூழலில், திமுகவை இந்து எதிர்ப்பு கட்சியாக பிரச்சாரம் செய்தால் மக்கள் உதாசீனப்படுத்துவார்கள் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்.'' இவ்வாறு அரசியல் விமர்சகரும், கல்வியாளருமான ராமசுப்ரமணியன் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications