ராமேஸ்வரம் விமான நிலையம்.. 2 இடங்களில் விமான நிலைய ஆணையம் ஆய்வு.. அடுத்தது என்ன?
சென்னை: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக 2 இடங்களில் இந்திய விமான நிலையம் ஆணையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து விமான நிலைய ஆணையத்தின் ஆய்வறிக்கை பரிந்துரைகள் கிடைத்த பின், தமிழக அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆண்டுக்கு சுமார் 4 கோடி பேர் வரை ஆன்மிக பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். அவர்களில் விமானம் மூலம் வருவோர் பெரும்பாலும் தூத்துக்குடி, மதுரை அல்லது திருச்சி ஆகிய 3 விமான நிலையங்களில் இறங்கி பின்னர் கார் அல்லது ரயில் மூலமாக ராமேஸ்வரம் வந்து சேர்கின்றனர்.

இதனால் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுலா பயணிகளால் நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர் மற்றும் நெய்வேலி ஆகிய 4 இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு ரூ.36.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் பட்ஜெட்டின் போது ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஓடுபாதையுடன் விரிவான விமான நிலையத்தை அமைக்க 700 ஏக்கர் நிலம் தேவையாக இருந்தது.
இதனால் உச்சிப்புளி மற்றும் கீழக்கரை அருகில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த இரு இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உச்சிப்புளி அருகில் உள்ள பெருங்குளம், கும்பரம் மற்றும் வாலாந்தரவை ஆகிய இடங்களிலும்,. கீழக்கரைக்கு அருகே உள்ள மணிக்கனேரி மற்றும் மாயாகுளம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் தனது ஆய்வு அறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பின், அரசு எந்த இடம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 600 ஏக்கர் தேவைப்படும் என்பதால், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பின் நிலம் கையப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications