Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று நாடு முழுக்க கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்கள் புனித பண்டிகையாக ரமலானை கொண்டாடி வருகிறார்கள். ரமலான் மாதத்தில் மாதம் முழுக்க நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்குவதையே இது குறிக்கிறது. கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

Ramzan muslim

ரமலான்

ரமலான் பண்டிகை பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பிறை தோன்றுவதை வைத்தே ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதனால் ரமலான் பண்டிகை உலகெங்கும் ஒருநாள் வரை மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை தென்பட்டதாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அரசு தலைமை ஹாஜி அறிவித்தார்.

சிறப்பு தொழுகை

அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை எழும்பூர் மாநகராட்சி திடலில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இதேபோல நெல்லை, கோவை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து

ரமலான் பண்டிகை இன்று நாடு முழுக்க கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நல்வழியில் முன்னேறும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், "அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை இந்த பண்டிகை அதிகரிக்கட்டும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திமுக தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அதேபோல அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல பல்வேறு அரசியல் தலைவர்களும் ரமலான் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+