ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அழிக்கப்பட்ட தாமரைகளுக்கு பதில் உருவான அழகு ரங்கோலி கோலங்கள்
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் போடப்பட்ட தாமரை கோலத்தை அதிகாரிகள் அழித்ததை அடுத்து அங்கு ரங்கோலி கோலம் போடப்பட்டது.
லோக்சபா தேர்தல் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண வைபவ விழா நடத்தப்பட்டது.
இதற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பினால் போடப்பட்டிருந்தன. தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் பாஜகவின் தாமரை சின்னம் உள்ள கோலம் சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டது.
அழித்த கோலங்களுக்கு பதில்
இந்த நிலையில் அழிக்கப்பட்ட கோலங்களுக்கு பதிலாக கோயில் நிர்வாகம் சார்பில் ரங்கோலி கோலங்கள் புதிதாக வரையப்பட்டன. போட்ட கோலத்தை அதிகாரிகள் அழித்ததற்கு பக்தர்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்.
கோலத்தை அழித்ததற்கு கண்டனம்
கோலம் அழிக்கப்பட்டது குறித்து தமிழிசை, தேர்தல் அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் தாமரை கோலத்தை வரைந்து வருகின்றனர்.
அதிகாரிகளின் செயல்
மகாலட்சுமி வீற்றிருக்கும் மலர் தாமரை என்பதாலேயே மக்கள் அதை வரைந்தனர். மத நம்பிக்கை அடிப்படையில் வரையப்பட்ட கோலத்தை கட்சி சின்னமாக கருதி அழித்த அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கிறோம்.
அறிக்கை
இந்து மத உணர்வுகளையும் பழக்க வழக்கங்களையும் அதிகாரத்தால் அழிக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என்று தனது அறிக்கையில் தமிழிசை தெரிவித்துள்ளார்.