தற்கொலைகள் அதிகரிப்பு.. எலிக்கொல்லி பேஸ்ட் விற்பனைக்கு தமிழகத்தில் தடை.. அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் எலிக்கொல்லி பேஸ்ட் விற்பனைக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இன்று சகிப்புத்தன்மை இல்லாத காரணத்தால் தொட்டதெற்கெல்லாம் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள். சின்னஞ்சிறிய சிறுவன், சிறுமி முதற்கொண்டு போன் கொடுக்கவில்லை, அப்பா திட்டினார், அம்மா திட்டினார் போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்வதாக சொல்லப்படுகிறது.

இது போல் சின்ன விஷயம் முதல் பூதாகரமான விஷயம் வரை தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த தற்கொலைக்கு மக்கள் பெரிதும் உண்பது எலிகொல்லிகளைத்தான்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எரகுண்டப்பட்டியை சேர்ந்த கூலித் தொழியாளியின் வீட்டில் எலித்தொல்லை இருப்பதால் அதை கொல்வதற்கு வாங்கி வந்த மருந்தை அவரது ஒன்றரை வயது குழந்தை சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அது போல் கடந்த 2018ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் செந்துறை கிராமத்தை சேர்ந்த இளைஞர் பெரியப்பா மகனின் திருமணத்திற்கு விடுப்பு கேட்டதால் பேராசிரியர் திட்டியதாக சொல்லி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அந்த இளைஞர் பயன்படுத்தியது எலி பேஸ்ட்டை தான்.
அது போல் கடந்த 7ஆம் தேதி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கார்த்திகா என்பவர் கள்ளக்காதலில் சிக்கியுள்ளார். கள்ளக்காதலனை மறக்க முடியாததால் 4 வயது பெண் குழந்தை மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு சேமியா உப்புமாவில் எலிகொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதில் ஆண் குழந்தை இறந்துவிட்டது. பெண் குழந்தை குறைவாக உப்புமாவை சாப்பிட்டதால் தப்பியது.
மற்ற விஷங்களை வாங்க நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் எலி மருந்தை கொலை செய்ய வாங்கினாலும் எலிக்காக வாங்குவதாக அனைவரையும் நம்ப வைக்கலாம் என்பதால் இந்த எலி பேஸ்ட்டால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications