குடும்ப அட்டையில் மனைவி போட்டோவுக்கு பதில் மது பாட்டில்.. ரேஷன் கார்டால் திணறிய மதுரை பேரையூர் கணவர்
சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தந்து வருகிறது.. அதேபோல, ரேஷன் அட்டைகளில் குறைகள் எதுவாக இருந்தாலும், அவைகளை களைந்துகொள்வதற்காக முகாம்களையும் மாதந்தோறும் அரசு நடத்தி வருகிறது.. எனினும் ஆங்காங்கே ஒருசில சலசலப்புகள் கிளம்பிவிடுகின்றன.. ரேஷன் கார்டுகள் அச்சிடுவதிலேயே இதுபோன்ற பிழைகள் இருப்பது, பொதுமக்கள் தரப்பில் சிலசமயம், அதிருப்தியையும் தந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் மதுரையில் நடந்துள்ளது.
இன்று அனைத்துவிதமான சேவைகளுக்கும், பயன்பாடுகளுக்கும் இன்றியமையாத ஆவணமாக உள்ளது ரேஷன் கார்டுகள்தான்.. எனவேதான், ரேஷன் கார்டுகள் விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

குடும்ப அட்டைகள் ரத்து
முறைகேடான விஷயங்களில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால், அந்த கார்டை ரத்தும் செய்துவிடுகிறது.. அதாவது, ஒரு குடும்பம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருந்தால் அல்லது தவறான தகவல்களைக் கொடுத்து ரேஷன் கார்டை பெற்றிருந்தால், அந்தக் கார்டு ரத்து செய்யப்படும்.
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி அல்லது வேறு ஏதேனும் முக்கியமான தகவல்கள் சரிசெய்யப்படாத பட்சத்தில், அந்த கார்டு உடனே ரத்து செய்யப்படலாம். வருமான வரம்பை ஒரு குடும்பம் தாண்டும்போது, அதன் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்.
பழைய ரேஷன் கார்டுகள்
ஒரு ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இறந்தாலோ அல்லது தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினாலோ, அந்தக் கார்டு ரத்து செய்யப்படலாம்.. திருமணம் ஆன பெண்கள், அவர்களின் பெயரை கணவரின் ரேஷன் கார்டில் சேர்த்த பிறகு, பழைய கார்டிலிருந்து நீக்கப்படாமல், 2 கார்டுகளிலும் பெயர் இருந்தால், அந்த கார்டு ரத்து செய்யப்படலாம்.
நீண்ட காலத்துக்கு ரேஷனில் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த கார்டு பயன்பாட்டில் இல்லாததாக கருதி ரத்து செய்யப்படலாம்..
போலியான ஆதார் அட்டை, முகவரிச் சான்றிதழ், போலி ஆவணங்களை தந்து கார்டு வாங்கியிருந்தால், அதுவும் ரத்து செய்யப்படும்.. இப்படி பல்வேறு காரணங்களால் கார்டுகள் ரத்து செய்யப்படும் நிலையில், கார்டு விநியோகித்ததிலேயே பிழை உள்ளதாக புகார்கள் எழுவது பெருகி விட்டது.
400 குடும்ப அட்டைகள்
2 மாதங்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம், செம்பவராயநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்ப அட்டைகளில், அவர்களது கிராம பெயருக்கு பதிலாக வேறொரு கிராம பெயர் இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை அக்கிராமத்தினருக்கு தந்துவிட்டது..
இதனால், தங்களது முகவரியை மாற்றி அமைக்க வேண்டும் என்று 400 குடும்பத்தினர்களும் மனு கொடுக்க திரண்டு வந்தார்கள்.. , 400 அட்டைகளை தங்களால் மாற்ற இயலாது, இ - சேவை மையத்திற்கு சென்று முகவரியை மாற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் சொன்னதால், அதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர் கிராம மக்கள்..,. சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
மதுரை பேரையூர்
இதோ மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கிறது.. பேரையூர் தாலுகா சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்.. இவருக்கு 46 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜெயப்பிரியா.
இவரது மனைவி ரேஷன் கார்டில் குடும்பத் தலைவராகவும், தங்கவேல் குடும்ப உறுப்பினராகவும், இவரது மகன், மகள் உறுப்பினராகவும் இருந்தனர்.
மது பாட்டில் போட்டோ
இதனிடையே, இவர்களது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது.. எனவே, மகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து இசேவை மையத்தில் நீக்கம் செய்தார் தங்கவேல். பிறகு ரேஷன் கார்டை வாங்கி பார்த்தால், மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தங்கவேல்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தங்கவேல் சொல்லும்போது, "கடந்த வாரம் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக என்னுடைய மனைவி சென்றிருந்தார்..
நலவாரியம் பதிவு
அப்போது ரேஷன் கார்டில் மகள் பெயர் நீக்கமாகியும், என்னுடைய மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோவும் இருந்திருக்கிறது. நாங்கள் இன்னும் அப்டேட் செய்யப்பட்ட கார்டை வாங்கவில்லை. ஆனால் இ-கார்டில் இப்படி மதுபாட்டில் படம் இருந்துள்ளது. அதனை பார்த்து நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்" என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications