ரேஷனில் வருது மாற்றம்.. தரமான சம்பவம்.. மொத்தம் 5784 ரேஷன் கடைகளாம்.. காரணமே ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் தான்
சென்னை : ரேஷன் கடைகள், புதுப்பொலிவுடன் காட்சி தந்து வருகின்றன.. விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் சீரமைக்கப்பட்டு, பளீச் லெவலுக்கு மாறிவிடும் என்கிறார்கள்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது..
நம்ம ரேஷன் கடை: இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2022 ஆகஸ்டில், மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய முயற்சியை, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கியுள்ளார்.. இந்த திட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து, ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான கடைகள் செயல்படும் கட்டடங்கள், பாழடைந்து காட்சி அளிப்பதால், அவைகள் புதுப்பொலிவுடன் தயாராகி வருகின்றன. இந்த கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்வுத்தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளுக்கு வரும் பயனாளிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதைவிட சிறப்பம்சமாக, ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்து வருகிறது...
தலா 75 கடைகள்: அதன்படி, முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு தலா, 75 கடைகள் தேர்வு செய்து சீரமைக்கப்பட்டு, 'பளீச்' வண்ணத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், அந்த கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 2,975 கடைகள் புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
சபாஷ் ராதாகிருஷ்ணன்: ராதாகிருஷ்ணன் எடுத்த முயற்சியால், இப்போது 3,000 ரேஷன் கடைகள் புதுப்பொலிவுக்கு மாறிய நிலையில், 5,784 கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது. மொத்தத்தில் தரத்தை வெளிப்படுத்தும் பிரிவில், 3,753 கடைகளுக்கும், பாதுகாப்பு மேலாண்மை பிரிவில் 2,031 கடைகளுக்கும் சர்வதேச தரச்சான்றுகள் பெறப்பட்டுள்ளன. ...
இதற்கெல்லாம் முக்கிய காரணம், பணிகளின் நிலை குறித்து, மண்டல இணை பதிவாளர்களிடம், ராதாகிருஷ்ணன் தினமும் அறிக்கை கேட்டு பெற்றதுடன், தொடர் ஆய்விலும் ஈடுபட்டதும்தான்.. விரைவில் மற்ற கடைகளுக்கும் தரச்சான்று கிடைத்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்..!!












Click it and Unblock the Notifications