'பி.டி.சார்' திரைப்பட குழு மீது தமிழக டி.ஜி.பி.யிடம் ரேஷன் கடை ஊழியர்கள் பரபரப்பு புகார்
சென்னை: ரேஷன் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் கொச்சையாக பிரதிபலிக்கும் வகையிலும் தற்போது 'ஹிப் ஹாப்' ஆதி நடித்து கார்த்திக் வேணுகோபால் இயக்கிய 'பி.டி.சார்' திரைப்படத்தில் வசனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக டி.ஜி.பி.யிடம் ரேஷன் கடை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மிரா, தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'பி.டி. சார்'. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இப்படத்தை வெற்றிப் படம் என்று அண்மையில் கூறினார். இதுபற்றி அப்போது அவர் கூறுகையில், "எங்களின் 'பி.டி. சார்' படத்தின் வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வருகை தந்து சிறப்பித்த நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது பிடி சார் படம் இரண்டாவது வாரத்தை கடந்து ஓடும் நிலையில் அதில் வரும் ஒரு காட்சி ரேஷன் கடை பணியாளர்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பா.தினேஷ் குமார், டிஜிபிக்கு அனுப்பியுள்ள புகாரில், "தமிழக முழுவதும் ரேஷன் கடையில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் கொச்சையாகப் பிரதிபலிக்கும் வகையிலும் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்து கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பிடி சார் திரைப்படத்தில் வசனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படக் காட்சியில் ரேஷன் கடைக்குப்போகும்போது ஒவ்வொரு முறை பணம் வாங்கும் போது, அவன் என் கையை தொட்டுத் தொட்டு வாங்குகிறான். இதெல்லாம் சகிச்சுக்கிட்டு குடும்பத்தைக் காப்பாற்றுவதாக நடிகை தேவதர்ஷினி மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த காட்சிகள் அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினர்களை இந்த கண்ணியமற்ற காட்சியானது மிகவும் புண்படுத்தச் செய்துள்ளது சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய படக்குழு, சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ளாமல் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய ஒரு துறையினரையே கொச்சைப்படுத்தி மிகவும் இழிவான, மலிவான சொற்களைப் பயன்படுத்தி காட்சிகளை அமைத்துள்ளது.
இந்த காட்சியானது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. படத்தில் இருந்து காட்சிகளை நீக்கவும், படத்தில் நடித்துள்ள நடிகர் ஹிப்ஹாப் ஆதி, நடிகை தேவதர்ஷினி மற்றும் படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி எங்களது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications