'ஓமிக்ரான் வைரஸ்: 3ஆம் அலை உறுதி, உடனடி நடவடிக்கை தேவை..' முதல்வருக்கு ரவிக்குமார் எம்பி பரபர கடிதம்
சென்னை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் 3ஆம் அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் ஓமிக்ரான் பரவல் குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் வைரஸ் பரவல் 2.5 மடங்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஓமிக்ரான் பரவல் வேகமும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டில் தற்போது 1100க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ரவிக்குமார் எம்பி கடிதம்
ஓமிக்ரான் பரவல் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டாவை காட்டிலும் குறைந்தபட்சம் 3 மடங்கு வேகத்தில் ஓமிக்ரான் பரவலாம் என ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஓமிக்ரான் குறித்து சில தவறான தகவல்கள் பரவுவதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

3ஆம் அலை ஏற்படும்
இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் காரணமாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் அது வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாக எடுத்து வருகிறது. ஓமிக்ரான் தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டிய கூடுதல் அம்சங்களைத் தங்களது மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன்.

தவறான தகவல்கள்
ஓமிக்ரான் தொற்று டெல்டாவைப்போல அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது தற்போதைய ஆய்வுகளின் முடிவு ஆகும். ஆனால், அதன் நீண்ட கால பாதிப்பு பற்றி இதுவரை எந்த ஆய்வும் வெளியாகவில்லை. எனவே, 'ஓமிக்ரானால் பாதிப்பு அதிகம் ஏற்படாது' என்ற தவறான நம்பிக்கையை மக்களிடம் ஊடகங்கள் ஏற்படுத்தி விடக்கூடாது. 'அனைவருக்கும் தொற்று ஏற்பட்டால் அந்த சமூகப் பரவலே எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிவிடும். ஒருவிதத்தில் இயற்கையே அளிக்கும் தடுப்பூசிதான் ஓமிக்ரான்' என ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இது தவறானதும் ஆபத்தானதுமாகும். ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்றுகிறது என்பதை மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்.

இங்கிலாந்து நிலை
இங்கிலாந்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் புதிய தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன. அதைக் கையாளுவதற்கு அவர்களுடைய சுகாதாரக் கட்டமைப்பு திணறுகிறது. கார் நிறுத்துமிடங்களிலெல்லாம் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ ஊழியர்களும் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாவதால் நோயாளிகளைக் கையாளுவதற்குப் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது. அதே போன்ற சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப்பற்றி நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

மாஸ்க்
முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைவிடவும் காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் (ventilation) முறையின் மூலமாக நோய்த்தொற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம் என ஜப்பான் காட்டியுள்ளது. அந்த முறையை இங்கும் பின்பற்றுவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அடர்த்தியாகக் கூடுவதையும், காற்றோட்டமில்லாத மால்கள், அரங்குகள் முதலானவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடுவதையும் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

குழந்தைகள்
இதுவரையிலுமான கொரோனா வைரஸ்களால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதிருந்தனர். ஆனால் ஓமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிறது. எனவே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் ஜன.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications