வன்னியர் வாழ்வுரிமை சங்கம்! பாமகவுக்கு போட்டியாக புதிய அமைப்பு! யார் தலைவர்? என்ன பின்னணி?
சென்னை: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் நீக்கப்பட்ட ரவி ராஜ் என்பவர் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் , வன்னியர் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் ரவிராஜை மொத்தமாக கட்டம் கட்டி ஒதுக்கினார் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், கட்சி மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து அதிரடி ஆக்ஷன் எடுத்தார் ராமதாஸ்.
பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்பினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மூன்று மாத இடைவெளியில் தனியாக வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளார் ரவி ராஜ். மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் படத்தை மட்டுமே ரவிராஜ் பயன்படுத்துகிறார். இதனிடையே இது பற்றி பாமக தரப்பில் நாம் விசாரித்த போது, ரவி ராஜ் நல்ல மனிதர் தான். மருத்துவர் ஐயா மீது பாசமாக இருந்தவர் தான். ஆனால் சற்று முன் கோபம் கொண்டவர். '' என்பதோடு முடித்துக் கொண்டனர்.
இதனிடையே ரவிராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications