“மலையை என் மேல தூக்கிவைங்க.. நான் சுமக்கிறேன்” செந்தில் காமெடி பண்றாரு உதயநிதி: அதிமுக மாஜி அட்டாக்!
சென்னை: மலையை நான் சுமக்கிறேன் என்று கூறிவிட்டு தற்போது ஊர்மக்கள் என் மீது மலையை தூக்கி வையுங்கள் சுமக்கிறேன் என்பதைபோல் நீட் தேர்வில் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு நகைச்சுவையாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு 45% குடிநீர் பற்றாக்குறையை போக்கும். தொடர் கன மழை பெய்யும் பொழுது சாலைகளில் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் தொற்றுநோய், மர்ம காய்ச்சல் பரவும் இது போன்ற காலங்களில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது பல்வேறு முன்எச்சரிக்கை எடுத்து மக்களை காத்தார்.

ஆனால் தற்போது இரண்டு நாட்களாக மதுரையில் மழை பெய்து வருகிறது. மதுரையே தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. மதுரையில் தெப்பக்குளம் உள்ளதா அல்லது, தெப்பக்குளத்துக்குள் மதுரை உள்ளதா? நானே நேரில் பல்வேறு இடங்களை பார்த்தேன். குறிப்பாக பெரியார், காளவாசல், தெற்கு வாசல், நெல்பேட்டை, அப்போலோ மருத்துவமனை, கோரிப்பாளையம், சிம்மக்கல் போன்ற பகுதியில் மழையின் தண்ணீர் தேக்கத்தால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சாலைகளில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் இருந்ததால் குழி ஆழம் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக கருடர் பாலம், செல்லூர், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், போன்ற சுரங்க பாதையில் நீர் சூழ்ந்து இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேங்கி மழை நீரை வெளியேற்ற அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் கூட அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது மின்னல் தாங்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீட்டின் சுவர் இடிந்துள்ளது. இதற்குரிய நிவாரணத்தை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை இறந்தால், மனித உயிரிழப்பு இருந்தால், வீடுகள் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அறிக்கையில் சொல்லி உள்ளார்.
அவர் சொன்னதற்கும், தற்போதுள்ள நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தற்பொழுது மழையால் தொற்றுநோய் கடுமையாக பரவி வருகிறது. இன்றைக்கு முதலமைச்சருக்கு கூட காய்ச்சல் வந்துள்ளது. அதனால் சாமானியர்களுக்கு எளிதாக வந்துவிடும். ஆகவே இதை தடுக்க முன்னேற்பாடு நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குகிறார். இதை பார்க்கும் பொழுது நான் மலையை தூக்குகிறேன் என்று ஊர் மக்களை அழைத்து அதே மக்களிடம் இந்த மலையை என்மீது தூக்கி வையுங்கள், நான் சுமக்கிறேன் என்பது போல நகைச்சுவையாக முட்டாள்தனமாக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு உள்ளது.
நீட் தேர்வில் தீர்வு காணவில்லை, காவிரி பிரச்சனையில் தீர்வு காணவில்லை, கல்விக்கடனில் தீர்வு காணவில்லை, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணவில்லை, சட்டம் ஒழுங்குக்கு தீர்வுகாணவில்லை, கொசுக்களுக்கு தீர்வு காணவில்லை, இப்படி எதற்குமே தீர்வு காண முன்வரவில்லை. சில சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு இதை திசை திருப்புகிறார். ஆகவே இந்த மழை காலங்களில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் துறையிலிருந்து நிவாரண நிதியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் மக்களை பாதுகாக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும், கும்பகர்ணனைப் போல் தூங்க கூடாது" என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications