எம்ஜிஆர் போல் சவுண்ட் விடும் எடப்பாடி? திமுக ஆட்சி 8 மாசம் தான்.. ஸ்டாலினுக்கு ஆர்பி உதயகுமார் பதில்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தின் இமாலய வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் வாய்க்கு வந்ததை பேசுகிறார் எனவும், எடப்பாடியை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் அவரிடம் தோற்றுப்போன வரலாறை தான் இந்த நாடு கண்டிருக்கிறது எனவும், திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் இன்னும் எட்டு மாதங்கள் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் நான்காம் கட்டமாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது பயணத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தின் இமாலய வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் வாய்க்கு வந்ததை பேசுகிறார் என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

ஆர்பி உதயகுமார்
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எடப்பாடியின் எழுச்சிவெற்றி பயணம் இமாலய வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உடைந்து போய் இன்றைக்கு ஸ்டாலின் வாய்க்கு வந்ததை எல்லாம் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார். எடப்பாடிக்கு மக்களின் வரவேற்பை பார்த்து புரிந்து கொள்ள முடியாத ஸ்டாலின் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போல கத்துகிறார் என்று வயிற்று எரிச்சலுடன், கேலி கிண்டலுமாக, நையாண்டியும் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை போல் 2026 சட்டமன்ற தேர்தலில் தீர்ப்பு உங்களுக்கு உரிய பதிலடியை மக்கள் தருவார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் சாமானிய தொண்டராக, கிளை கழக செயலாளர் முதலமைச்சர், பொதுச் செயலாளர் வரை தன் விசுவாச உழைப்பால் 52 ஆண்டு காலத்திற்கு மேலே உழைத்து உயர்ந்த உத்தமரை குறைத்து மதிப்பீட்டவர்கள் எல்லாம் அவரிடம் தோற்றுப்போன வரலாறு தான் இந்த நாடு கண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் இன்னும் எட்டு மாதங்கள் தான்,திமுகவின் தில்லுமுல்லு பிரச்சாரத்திற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. ஆகவே கழக கண்மணிகளே 27 வது வாரமாக நடைபெறும் திண்ணை பிரச்சாரத்தில் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக களத்திற்கு செல்வோம் வெற்றி வாகை சூடுவோம்" என கூறினார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
கடந்த 11ஆம் தேதி திருப்பூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை விமர்சிக்கிறார். இன்னும் பேசுங்கள்; இன்னும் இறங்கிப் பேசுங்கள். நான் அதைப் பற்றி கவலையேபடவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், பேச்சைக் குறை - செயலில் மட்டுமே காண்பிக்கவேண்டும். ஏதோ தன்னை எம்.ஜி.ஆர்., என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா அம்மையார் மாதிரி நினைத்துக் கொண்டு சவுண்டு விடுகிறார். ஆனால், பாவம் அவருக்குத் தெரியவில்லை. அவருடைய வண்டி கிளம்பியதும், சொந்த கட்சிக்காரங்களே என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய எந்த சதித் திட்டமும் நம்முடைய அரசின் சாதனைகள் முன்னால் எடுபடவில்லை, இனியும் எடுபடாது!" என பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications