உங்க குழந்தைக்கு 10 வயதாகிவிட்டதா? இனி ஜாயிண்ட் கணக்கு தேவையில்லை! தனியாகவே வங்கி கணக்கு திறக்கலாம்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்த சேமிப்பு அல்லது டெர்ம் டெபாசிட் வங்கிக் கணக்குகளைத் சுதந்திரமாகத் திறந்து செயல்பட அனுமதிக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதாவது பெற்றோருடன் சேர்ந்து கூட்டு வங்கி கணக்குகளை திறப்பதற்கு பதிலாக தனியாகவே 10 வயதில் இருந்து கணக்குகளை திறக்க முடியும்.
முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதி பொருந்தும்.
புதுப்பிக்கப்பட்ட இந்த விதிகளை அமல்படுத்தும் சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சிறார்களுக்கான டெபாசிட் கணக்குகளைத் திறப்பதற்கும் இயக்குவதற்குமான விதிகளை எளிமைப்படுத்தி உள்ளது.

இனி எந்த மைனர் வயதினரும் தனது இயற்கை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகளை திறக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே சமயம் குறைந்தபட்சம் 10 வயது நிரம்பிய சிறார்கள், அவர்கள் விரும்பினால், இந்தக் கணக்குகளைத் தாங்களாகவே திறந்து நிர்வகிக்கலாம். தேவை என்றால் கூட்டு கணக்கும் திறக்கலாம் . இல்லையென்றால் தனியாகவே திறக்கலாம். அதாவது பெற்றோர், கார்டியன் உதவி இன்றியே இவர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியும்.
வங்கிகள் தங்கள் சொந்த சிக்கல்கள், கொள்கையின் அடிப்படையில் இந்த கணக்குகளுக்கான விதிகளை தேவைக்கு ஏற்றபடி சிறிய அளவில் மாற்றிக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியாக திறக்க அனுமதிக்க வேண்டும். அதாவது இந்த 10+ வயதினர் தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு வைத்து இருக்கலாம், மாதம் எவ்வளவு பரிமாற்றம் செய்யலாம் என்பதற்கான வரம்புகளை அமைப்பது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தீர்மானிப்பது ஆகியவற்றை வங்கிகள் வேண்டுமானால் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.
மைனர் 18 வயதை அடையும் போது என்ன விதி?
10+ வயதில் தனியாக கணக்கு தொடங்கும் அந்த மைனர் 18 வயதை அடைந்து பெரியவராக மாறியதும் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியது இல்லை. ஆனால் வங்கி புதிய கணக்கு இயக்க வழிமுறைகளை ஏற்று கையொப்பம் இட வேண்டும். மேலும் புதிய மாதிரி கையொப்பத்தையும் சேகரிக்க வேண்டும்.
கணக்கு இதற்கு முன்பு பெற்றோர் அல்லது பாதுகாவலரால் இயக்கப்பட்டிருந்தால், வங்கி கணக்கு இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது ஆன பிறகு கணக்கு விவரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படாத வகையில், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவும், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும் வங்கிகள் மெயில், கடிதம் அனுப்ப வேண்டும்.
மைனர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வங்கிச் சேவைகளை வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். இணைய வங்கி, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் ஆகியவை மைனர் கணக்குகளுக்கு வழங்க முன்வர வேண்டும். அதாவது மைனர் கணக்கு என்பதற்காக இணைய வங்கி, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை போன்றவை வழங்காமல் இருக்க கூடாது.
அதேபோல் 10+ வயதில் தனி கணக்கு செல்லும் என்பதால் அவர்கள் எழுதும் காசோலையும் செல்லும். அதே சமயம் வங்கிகள் தங்கள் சொந்த சிக்கல்கள், கொள்கையின் அடிப்படையில் இந்த கணக்குகளுக்கான விதிகளை தேவைக்கு ஏற்றபடி சிறிய அளவில் மாற்றிக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமாக அல்லது பாதுகாவலரால் இயக்கப்படும் மைனர் வங்கி கணக்குகள், ஓவர் டிராஃப்ட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள் கணக்கு இருப்பு எப்போதும் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். அத்தகைய கணக்குகளில் கடன் அல்லது எதிர்மறை இருப்பு இல்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். மைனர் வங்கி கணக்கு அடிப்படையில் கடன் வழங்க கூடாது.
சிறார்களுக்கான கணக்குகளைத் திறக்கும்போது வங்கிகள் முறையான KYC விதிகளை பின்பற்ற வேண்டும். கணக்கைத் திறக்கும்போது முறையான சோதனைகளைச் செய்வதும், காலப்போக்கில் கணக்கைச் சரிபார்ப்பதும் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications