தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்க முடியாது.. ஆர்பிஐ ஊழியர்கள் அடாவடி.. விரைவில் பாயும் போலீஸ் ஆக்சன்
சென்னை: சென்னை ஆர்பிஐ அலுவலகத்தில் நடந்த குடியரசுத் தின விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்று ஆர்பிஐ ஊழியர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சில அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டு வந்தது.

புகார்கள்
முக்கியமாக சென்னை ஐஐடியில் சமீபத்தில் நடத்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது.இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் நடந்தது. இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல.

கட்டாயம் அல்ல
அதற்கு கட்டாயம் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்பாக உத்தரவும் எதுவும் இல்லை. தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை என்று கூறினார். இந்த உத்தரவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

கட்டாயம்
தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும், பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும், என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மீறல்
ஆனால் இந்த உத்தரவை மீறி.. சென்னை ஆர்பிஐ அலுவலகத்தில் நடந்த குடியரசுத் தின விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்று ஆர்பிஐ ஊழியர்கள் கூறியுள்ளனர். அவர்களின் இந்த செயலால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி ஆர்பிஐ ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகே இருந்தவர்கள் தொடர்ந்து கேட்டும் எழுந்து நிற்க ஆணவமாக மறுத்துள்ளனர்.

மறுப்பு
அங்கு இருந்தவர்கள் சிலர்.. நீங்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டதற்கு.. நாங்கள் ஏன் நிற்க வேண்டும்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் நிற்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியவர்களுடன் இவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவை பற்றி அங்கு இருந்தவர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அங்கிருந்து ஆர்பிஐ ஊழியர்கள் வெளியேறி உள்ளனர்.

வாக்குவாதம்
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் பற்றி உரிய புகார் அளிக்கும் பட்சத்தில் அதில் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது. வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசு ஆணைப்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications