2020ஆம் ஆண்டில் நீங்கள் விரும்பி சாப்பிட்ட உணவு எது?.. வழக்கம் போல் பதிலளித்த வாசகர்கள்!
சென்னை: 2020-ஆம் ஆண்டில் நீங்கள் அதிகமாக விரும்பி சாப்பிட்ட உணவு எது என்ற கேள்விக்கு வாசகர்கள் என்ன பதில் அளித்துள்ளார்கள் தெரியுமா?
கொரோனா, பொருளாதார இழப்பு, இயற்கை சீற்றங்கள் என 2020-ஆம் ஆண்டு ஏன்தான் பிறந்ததோ என நினைக்கும் அளவுக்கு மக்கள் கடுமையாக பாதித்தனர். 2021-ஆம் ஆண்டு பிறந்து 3 நாட்கள் ஆகிறது.
இந்த ஆண்டாவது இனிமையாக நல்லதொரு ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஒரு ஆண்டு நல்லதோ கெட்டதோ அந்த ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் அசைப்போடாமல் இருக்க முடியாது.
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சம்!
எத்தனை ஆப்ஷன்கள்
அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நீங்கள் அதிகமாக விரும்பி சாப்பிட்ட உணவு எது என நம் வாசகர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரியாணி, இட்லி- தோசை, சோறு, பூரி, சப்பாத்தி, பழங்கள், நிறைய டீ, காபி, சரியாவே சாப்பிடலைங்க என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
பிரியாணிதான் பிடிக்கும்
அதில் அனைவரும் எதிர்பார்த்தது போல் பிரியாணியையே அதிகம் பேர் விரும்பி சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்கள். அது சைவமோ அசைவமோ பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்தான். இந்த பிரியாணியை பிடிக்கும் என 33.68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள். ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்களும் பிரியாணியைதான் அதிகம் பேர் ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளது.
இட்லிக்கு சட்டினி
அது போல் இட்லி - தோசையை 21.7 சதவீதம் பேர் விரும்பி சாப்பிட்டனராம். இட்லி, தோசையுடன் சட்னி, சாம்பார், இட்லி மிளகாய் பொடி என சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டோமேயானால் அதன் ருசியே தனிதான். இட்லி, தோசையில் இன்று எத்தனை வகைகள் வந்துள்ளன. கடைகளுக்குச் சென்றால் எத்தனை வெரைட்டிகள்? தென்னிந்திய உணவான இட்லி தோசையை எந்த உணவாலும் அடிச்சிக்கவே முடியாது.
சோறுதான் முக்கியம்
அடுத்ததாக சோறு. இதற்கு 13.64 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். சோறுதான் முக்கியம், எனக்கும் பசிக்கும்மில்ல! என்ற டயலாக்குகளை நாம் கேட்டுள்ளோம். அந்த வகையில் இரவு நேரமாக இருந்தாலும் ஒரு பிடி சோறு இல்லாவிட்டால் சிலருக்கு சாப்பிட்ட ஒரு ஃபீலே இருக்காது. அதிலும் பழைய சோற்றில் மோர், உப்பு போட்டு சின்ன வெங்காயத்தை வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே சுவைதான்.
பூரி சப்பாத்தி சூப்பர்
பூரி சப்பாத்தி உணவுக்கு 2.66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். கோதுமை மாவினால் செய்யப்படும் இரண்டு இரு விதமான சுவைகளை கொடுக்கும். சப்பாத்தி தோசைக் கல்லில் போட்டு எடுப்பது, பூரி எண்ணெயில் பொரித்து எடுப்பது, டயட்டில் உள்ளவர்கள் சப்பாத்தியை அதிகம் விரும்பி சாப்பிடுவர். சப்பாத்தி வட இந்தியர்களின் உணவாகும். இதனுடன் குருமா, உருளைக் கிழங்கு வைத்து சாப்பிடலாம்.
இயற்கை உணவுகள்
பழங்களைத்தான் நாங்கள் விரும்பி சாப்பிட்டோம் என 5.65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். 365 நாட்களும் உணவு உணவு என அருந்தாமல் வாரத்தில் ஒரு நாளாவது பழங்களை மட்டுமே உணவாக உண்ணுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு பழத்திற்கு ஒவ்வொரு சுவையும் மருத்துவ குணமும் உள்ளது. இந்த பழம், இந்த காய் சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் என சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு பழங்கள் நார் சத்து கொண்டவை.
அறிவுரை
டீ, காபிதான் எங்களுக்கு பிடித்தது என 7.58 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். இன்று காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலர் காலை, மாலை இரு வேளைகள் குடிப்பர். சிலர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பர். இவை இரண்டுமே அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.
பொது முடக்கம்
சரியாவே சாப்பிடலைங்க என 15.09 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். 2020-ஆம் ஆண்டில் கொரோனா பாடாய்படுத்திவிட்டது. பொது முடக்கம் ஏற்பட்டு உணவுக்கே வழியில்லாமல் தவித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள்.