ரியல் எஸ்டேட்டில் அதிரடி.. கட்டுமானங்களில் கட்டிட தரச்சான்றிதழ் தாக்கல் செய்யணுமா? அரசின் முடிவு?
சென்னை: கட்டுமானங்களில், சிலசமயங்களில், தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால், கட்டிடங்கள் இடிந்து விழும் நிலைமை உள்ளதால், தரச்சான்றை கட்டாயமாக்க, தமிழக அரசும், ரியல் எஸ்டேட் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதனடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" செயல்பட்டு வருகிறது
விதிமுறைகள்: கடந்த 2016ல், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன... அதேபோல, 5,000 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கியது.
ஆனால், "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது..கட்டிடத்தின் தரச்சான்றிதழ்கள் கேட்கப்படுவது இல்லை. ஆனால், சமீப காலமாக கட்டிடங்களின் தரம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சிலசமயம, கட்டிடத்தின் தரம் சார்ந்த புகார்களையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
கட்டிடங்கள்: எனவேதான், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில், மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கட்டிடங்களை பதிவு செய்யும்போது, கட்டுமான நிறுவனங்கள் தரத்தை உறுதி செய்வதற்கான தரச்சான்றையும் தாக்கல் செய்வது கட்டாயம் என்று தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.. இந்த உத்தரவானது, வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதனிடையே, மகாராஷ்டிராவை பின்பற்றி, தமிழக ரியல் எஸ்டேட் ஆணையமும் கட்டிட தரச்சான்று தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கோரிக்கை: காரணம், தமிழகத்தில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதற்கான பணிகளை துணை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்கின்றன. இதனாம் சில சமயம் தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால், கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், தரச்சான்றை கட்டாயமாக்க, தமிழக அரசும், ரியல் எஸ்டேட் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications