சென்னை புறநகரில் நிலம் வைத்துள்ளவர்களே உஷார்.. உங்கள் நிலம் உங்களுக்கே சொந்தமில்லாமல் போகும் அபாயம்
சென்னை: சென்னையில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் நிலத்தை மோசடியாக பதிவு செய்து விற்ற ரியல் எஸ்டேட் தரகரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்கும் கும்பல்களிடம் உஷாராக இல்லாவிட்டால், சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர். மறைமலைநகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், கிளாம்பாக்கம், பூந்தமல்லி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, ஆவடி, சிறுசேரி, மாடம்பாக்கம், மாம்பாக்கம், நசரத்பேட்டை, திருவள்ளூர், திருநின்றவூர், பொன்னேரி போன்ற பகுதிகளில் தற்போது ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த தென் அகரத்தில் கடந்த 2011 வாக்கில 4 லட்சம் முதல் 5 லட்சம் என்று இருந்த ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு தற்போது 15 முதல் 18 லட்சம் ரூபாய் என்கிற அளவில் வளர்ந்துள்ளது. இதேபோல் ஆவடியையை ஒட்டியுள்ள பகுதிகளில் 15 வருடம் முன்பு வெறும் 3லட்சம் , 4 லட்சம் என்று இருந்த நிலத்தின் மதிப்பு 15 முதல் 20லட்சம் என்கிற அளவில் வளர்ந்துள்ளது.
நிலத்தின் மதிப்பு வேகமாக அதிகரிப்பதன் காரணமாக, பல நிலங்கள் வில்லங்கத்தில் சிக்கியும் உள்ளன. வயதானவர்கள், பெண்கள், வெளிநாடுகளில், வெளியூர்களில் வசிப்பவர்களின் நிலங்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பது நடக்கிறது. இதற்காக ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்களை வழங்கியும் பட்டா பதிவு செய்து வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறார்கள்.. இந்த செயல்களை ஒரு சில ரியல் எஸ்டேட் இடைதரகர்கள் செய்துவிடுகிறார்கள். அப்படித்தான் ஆவடியில் நடந்துள்ளது.
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வசிக்கும் 44 வயதான சைலஜா என்பவருக்கு பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் பகுதியில் 2 வீட்டு மனைகள் இருக்கிறது. அதே இடத்தில் பூந்தமல்லியை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனையும் இருந்து வந்தது. இந்தநிலையில் ஆவடி கன்னிகாபுரம், காந்தி தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான தனசேகர் (வயது 45) என்பவர் ரியல் எஸ்டேட் தரகர்களான சரத்பாபு மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் சந்திரனுக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டாராம். அதேபோல் சைலஜாவுக்கு சொந்தமான இடத்தையும் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்தாராம்.
இதுகுறித்து அறிந்த சைலஜா மற்றும் சந்திரன் இருவரும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து நேற்று ரியல் எஸ்டேட் தரகர் தனசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட 2 இடங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications