ரியல் எஸ்டேட் பில்டர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி? தவித்த மக்களுக்கு மத்திய அரசு செம கிஃப்ட்
சென்னை: தமிழக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் வீடு வாங்குபவர்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், புகார்களை விசாரிக்க தனி "குறை தீர்வு பிரிவு" அமைக்க மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. ரியல் எஸ்டேட் சட்ட விதிகளையும் மீறி கட்டுமான நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தவும், பொதுமக்களின் அதிருப்தியை போக்கவும் சென்னையில் இந்த புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. இனி பில்டர்களின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு அதிகரிக்கும் என்பதால் ரியல் எஸ்டேட் சந்தையில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், வீடு மற்றும் மனை வாங்குபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் 2016ம் ஆண்டு மத்திய அரசால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (RERA) கொண்டு வரப்பட்டது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழகத்தில் 2017ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை அமைக்கப்பட்டன. இந்த சட்டத்தின் கீழ், புதிதாக உருவாக்கப்படும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் மற்றும் மனைப் பிரிவுகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். இப்படி பதிவு செய்யப்பட்ட திட்டங்களில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆணையத்தில் புகார் அளித்துத் தீர்வு பெறலாம்.
இப்போதைய நடைமுறைப்படி, வீடு ஒப்படைப்பில் தாமதம் அல்லது ஒப்பந்தத்தில் சொன்ன வசதிகள் செய்து தராமை போன்ற புகார்களை பொதுமக்கள் குறிப்பிட்ட படிவங்கள் வாயிலாக, உரிய கட்டணம் செலுத்தி ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம்.
கட்டுமான திட்டங்கள் & டெக்னிக்கல் பிரச்சனை
இந்தப் புகார்கள் முறைப்படி வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, ஆணைய அமர்வுகளில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்படும். ஆனால், இந்த விசாரணை முறைகள் மற்றும் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் மத்தியில் சமீபகாலமாக அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதுவும் , பல வழக்குகளில் ஆணையம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும், பெரும் கட்டுமான நிறுவனங்கள் அந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், கட்டுமானத் திட்டங்கள் குறித்த புகார்களை வெப்சைட் வாயிலாகப் பதிவு செய்வதிலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்வதிலும் மக்களுக்குப் பல்வேறு டெக்னிக்கல் சிக்கல்களும், சேவை குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில், இத்தகைய சேவை குறைபாடுகள் குறித்து முறையிடவோ அல்லது அவற்றை விசாரிக்கவோ முறையான வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இதன்காரணமாக பணத்தையும் கட்டிவிட்டு, வீடுகளுக்காகக் காத்திருக்கும் மக்கள், ஆணையத்தின் வழியாக தீர்வு பெற முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில்தான், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அளவிலான மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் ஆணையங்களின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், ஒவ்வொரு மாநில ரியல் எஸ்டேட் ஆணையத்திலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்கவும், சேவை குறைபாடுகளைக் களையவும் Grievance Redressal Unit அதாவது 'தனி குறை தீர்வு பிரிவு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுகர்வோருக்கான நம்பகத்தன்மை
மத்திய அரசின் வழிகாட்டுதலை தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசு தனது ரியல் எஸ்டேட் ஆணையத்தில் இந்த வசதியை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக ரியல் எஸ்டேட் ஆணையத்திலும் (TNERA) இந்தக் குறை தீர்வு பிரிவு விரைவில் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரிவு செயல்பாட்டுக்கு வரும்போது, கட்டுமான நிறுவனங்கள் மீதான புகார்கள் மட்டுமின்றி, ஆணையத்தின் சேவையில் உள்ள குறைகளையும் பொதுமக்கள் தெரிவிக்க முடியும். இது ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்னைகளை குறைத்து, நுகர்வோருக்கான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications