நகரமயமாதலில் முன்னிலையில் தமிழ்நாடு.. ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சிபெறும்..மு.க.ஸ்டாலின் பேச்சு!
வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
சென்னையில் கிரிடாய் அமைப்பின் ரியல் எஸ்டேட் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி.
எல்லோருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். நம்முடைய இலக்கு பெரிதாக உள்ளதால், முயற்சியும் பெரிதாக உள்ளது. பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்வதாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

நகரமயமாதல்
குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

நகர மக்கள் தொகை
நகரங்கள், கிராமப்புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வருவாய் குறைவாக உள்ள மக்களுக்கு வீட்டு வசதி கழகத்தின் சார்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு 1.90 கோடியாக இருந்த நகர மக்கள் தொகை, 2011ல் 3.41 கோடியாக அதிகரித்தது. அது, 2031ம் ஆண்டு 5.31 கோடியாக இருக்கும்.

ரியல் எஸ்டேட் துறை
வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றைச் சாளர முறை செயல்பாட்டில் உள்ளது. திட்ட அனுமதிக்கான ஒப்புதலை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டம்
கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே நீங்களும் எங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications