Ajitha Agnel: அஜிதா ஆக்னல் ஏன் திமுகவில் இணைந்தார்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
சென்னை: தூத்துக்குடியை சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் அக்கட்சியில் இருந்து விலக காரணம் என்ன என்பதை பொதுச் செயலாளரும் திநகர் தொகுதி வேட்பாளருமான புஸ்ஸி ஆனந்த் விளக்கியுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே களபணி ஆற்றி வந்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததும் மாவட்ட வாரியாக பதவிகளை கொடுத்து வந்தார்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அஜிதாவுக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. அவருக்கு வழங்காமல் வேறொருவருக்கு (சாமுவேல்) வழங்கத் திட்டமிட்டது. இதுவே மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தனக்கு பதவி வழங்கக் கோரி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து வெளியேறிய விஜய்யின் காரை மறித்து முறையிட முயன்றார். ஆனால், விஜய் காரை நிறுத்தாமல் சென்றதும், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்தியதும் அஜிதாவை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியது.
மேலும் அஜிதாவுக்கு பதவி கிடைக்காததற்கு புஸ்ஸி ஆனந்த்தான் காரணம் என அஜிதா கருதினாராம். அது போல் அஜிதாவுக்கு வாய்ப்பே கிடைக்காது என புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் சொன்னதாக தகவல்கள் கிடைத்த நிலையில் அஜிதா மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் நல்வாய்ப்பாக குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் இருந்த அஜிதாவை விஜய் என்றில்லை அந்த பகுதி மாவட்டச் செயலாளர் கூட போய் பார்க்கவில்லை. ஒரு வழியாக அஜிதா அபாய கட்டத்தை தாண்டி சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார்.
ஆனால் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும், அவர் கட்சிப் பணிகளில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டதும் அவர் வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.
தற்போதைய நிலை
கட்சியின் கொடி மற்றும் சின்னங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய அஜிதா, தவெக நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தற்போது அவர் திமுக எம்பி கனிமொழி முன்னிலையில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இவர் திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்தும் இவரது குற்றச்சாட்டு குறித்தும் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், மற்ற கட்சியில் எத்தனை பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் தவெகவில் எத்தனை பேருக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்.
பெண்களுக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகளை கொடுக்கிறோம். திமுக நிர்வாகியின் மகள் எங்கள் கட்சியில் இணைந்து எனக்காக பிரச்சாரம் செய்வதே தவெகவில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு சிறந்த உதாரணமாகும் என தெரிவித்தார். திநகர் தொகுதியின் எம்எல்ஏ ஜெ.கருணாநிதியின் மகள்தான் தவெகவில் இணைந்துள்ளார். கருணாநிதிக்கு இந்த முறை வாய்ப்பளிக்காமல் அவரது அண்ணன் மகனுக்கு திமுக வாய்ப்பு கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications