ஓபிஎஸ் vs டிடிவி தினகரன்.. அந்த சமூக வாக்குகள்.. கணக்குப் போட்டு ஆரம்பித்து வைத்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: தென் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள எடப்பாடி பழனிசாமி, அமமுகவை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது என்று சூசகமாக கூறியுள்ளார். ஆனால் ஓபிஎஸ் தரப்புக்குக் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பின் உள்ள காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமமுக கூட்டணியில் இணையுமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் காலில் கூட விழுகிறோம்.. எங்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பேசியது தொடர்பான கேள்விக்கு, காலம் கடந்த ஒன்று என்று பதில் அளித்தார்.

இதனால் அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாரானாலும், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ப்பதில் உடன்பாடு இல்லை என்று பார்க்கப்படுகிறது. தற்போது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டு முடித்திருக்கிறார். அடுத்ததாகத் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் மறவர், கள்ளர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் சமூக வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தொடக்கம் முதலே இந்த சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் இருந்து வருகிறது. ஓபிஎஸ் உடனான மோதல், வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் செப்.4ல் மதுரையில் மாநாடு நடத்த உள்ளார்.
இப்படியான ஒரு நேரத்தில் அமமுகவை மட்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியுள்ளார். இதன் மூலமாகத் தென் மாவட்டங்களில் ஒரு சமூக மக்களை அமைதிப்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புவதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக அக்.30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.
அதற்கு மாலை அணிவிக்க எடப்பாடி பழனிசாமி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் பகைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி கமுதி வந்தால், அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப வாய்ப்புகள் உள்ளது. இதனை முன்கூட்டியே கணக்கிட்டு எடப்பாடி பழனிசாமி அமமுகவை அரவணைக்க முடிவு எடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பைக் கட்சியில் சேர்த்தால், அவர்களுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடங்கி அமைச்சரவையில் இடம் கொடுப்பது வரை பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆனால் தனிக் கட்சியுடன் பயணிக்கும் அமமுகவுக்கு அப்படியான எந்த விஷயங்களை அதிமுக செய்யத் தேவையில்லை. பாஜக மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி, உள் ஒதுக்கீடு மூலமாகத் தொகுதிப் பங்கீடு கொடுத்துவிட முடியும்.
இதனால் ஓபிஎஸ் தரப்பை ஒப்பிடும் போது டிடிவி தினகரனை சேர்த்துக் கொள்வது எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் வலிமை தான். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் பயணிக்கும் போதே எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் ஓபிஎஸ் மாநாட்டில் டிடிவி தினகரன் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications