விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை! விரைவில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளும் 2 கோடி உறுப்பினர்கள் என்பதை இலக்காக கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
இக்கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கமும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் இதுவரை நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில் முதல் முறையாக மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள், விவசாயிகள், என பன்முகம் கொண்டவர்களையும், பொதுமக்களையும் உறுப்பினர்களாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேபோல் மாவட்ட வாரியாக அடுத்த 2 மாத காலத்திற்கு நேரடி சுற்றுப்பயணம் செல்லவுள்ள புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் விஜய் மக்கள் இயக்கம் இப்போதே அதற்கு தயாராகும் வகையில் பரபரப்பாக இயக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்துவார் என்றும் அப்போது நிர்வாகிகளோடு குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ விஜய் புகைப்படம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்கவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை கண்காணிக்கவும் திமுக பார்வையாளர்களை நியமித்திருப்பது போல், விஜய் மக்கள் இயக்கமும் சில வியூகங்களை வகுத்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications