தொடரும் கன மழை.. நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில், நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே நிலையில் உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் தற்போது வரை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, 26 செ.மீ, திருச்செந்தூர் 24 செ.மீ மழை பெய்துள்ளது.
இதனால் முதலில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று மாலை ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 18 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications