தான பத்திரப்பதிவு செய்றீங்களா.. 1% பத்திரப்பதிவு செட்டில்மென்ட்..கட்டண உயர்வு திரும்ப பெறப்படுகிறதா?
சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடம் பரவலாக எழ ஆரம்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரசீது கட்டணம்: குறிப்பாக, ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- எனவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக்கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதைச் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு: இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது... இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்கிறார்கள். அதனால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.
இந்த கட்டண உணர்வு தொடர்பாக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ். ராமபிரபு ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் கட்டண உயர்வால் ஏற்படும் நடைமுறை சிக்கலை விளக்கி உள்ளார்.
"கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்தது.. இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ...
1 சதவீதம்: இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக மக்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.. பொது அதிகார ஆவணத்துக்கு சொத்து மதிப்பில் 1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பதிவுத்துறை சார்பில் வருடந்தோறும் வருவாய் அளவு அதிகரித்தே வருகிறது.. மாநிலம் முழுவதும் கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.9,121.50 கோடியாகவும், 2018-19ம் ஆண்டில் ரூ.11,071 கோடியாகவும் இருந்த வருவாய் அளவு, அடுத்தடுத்த நிதியாண்டுகளில் கொரோனா தொற்றால் குறைந்துவிட்டது.
பொதுமுடக்கம்: மாநிலம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்கள் மூடல், பொதுமுடக்கம் போன்ற காரணங்களினால், 2019-2020ம் ஆண்டில் வருவாய் அளவு ரூ.11,028 கோடியாக இருந்தது. இது மேலும் குறைந்து, 2020-21ம் நிதியாண்டில் ரூ.10,643 கோடியாக சரிந்துவிட்டது. கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய சூழலில் 2021-22ம் நிதியாண்டில் வருவாய் 13,913 கோடியாக உயர்ந்தது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த நிதியாண்டு அதாவது 2022.-23 மற்றும் இந்த நிதியாண்டு 2023-24-ல் பதிவுத்துறை வருவாய் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் நிதியாண்டில் ரூ.15 கோடியை வருவாய் அளவு தாண்ட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
கட்டணம்: அந்தவகையில், பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை என்பதால், இப்போதுதான் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றாலும், பொதுமக்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே எழ ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications