ஆபத்தான நிலையில் ஜெ.அன்பழகன்... லண்டன் மருத்துவர்களிடம் யோசனை கேட்ட ரேலா மருத்துவர்கள்
சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமான உள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் லண்டன் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசித்திருக்கிறார்கள்.
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2-ம் தேதி ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் இருந்ததால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.

தொடக்கத்தில் ஜெ.அன்பழகனுக்கு 80% ஆக்ஸிஜன் செயற்கையாக தேவைப்படுவதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் நான்கு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை ஆக்ஸிஜனின் தேவை 40% ஆக குறைந்துள்ளதாகவும், அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்போது புதிதாக நேற்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் முகமது ரேலாவை பொறுத்தவரை ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடக் கூடிய நோயாளிகளை அந்த நிலையில் இருந்து மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர். அதுமட்டுமல்லாமல் இவர் உலகளவில் பிரசித்தி பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணரும் கூட. இவர் லண்டனில் ஏற்கனவே பணியாற்றியதால் அங்குள்ள மருத்துவ நிபுணர்களுக்கு நல்ல பரிச்சயம் பெற்றவர்.
அந்த வகையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர்களோடு ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் குழு காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு மட்டுமின்றி சிறுநீரக பிரச்சனையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications